இன்று ஒரு நாள் மட்டும் ஊட்டி மலை ரயில் ரத்து!
நீலகிரி: ஊட்டி மலை ரயில் இன்று ஒரு நாள் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஊட்டியில் கோடை சீசன் களை கட்ட தொடங்கியுள்ளதால் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஊட்டிக்கு செல்லும் வழியில் இயற்கை அழகை கண்டு ரசிக்க வசதியாக சுற்றுலாப் பயணிகள் மலை ரயிலில் பயணம் செய்ய விரும்புகின்றனர்.
சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தினமும் மலை ரெயில் புறப்பட்டுச் சென்று வருகின்றது.
இந்த நிலையில் மேட்டுபாளையத்தில் இருந்து ஊட்டிக்கு செல்லும் மலை ரயில் இன்று ஒரு நாள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் ஒரு மரம் சாய்ந்து விழுந்துள்ளதாக கூறப்பட்டுகின்றது. இதையடுத்து மரத்தை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் இன்று ஒரு நாள் ஊட்டி மலை பாதைக்கு செல்லும் ரயில் ரத்து செய்யப்படுகிறது.
மரத்தை அகற்றும் பணி முடிந்ததும் நாளை முதல் ரயில் மீண்டும் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கோடை சீசன் முடியும் வரை கூடுதலாக சிறப்பு மலை ரயில் இயக்க வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் சார்பில் கோரிக்கை வலுத்து வருகின்றது.