கோடைவிழா துவங்கியது: ஊட்டியில் காய்கறி கண்காட்சி
நீலகிரி: ஊட்டி கோத்தகிரி நேரு பூங்காவில் 6வது காய்கறி கண்காட்சி மற்றும் கோடை விழா நிகழ்ச்சிகள் நேற்று துவங்கியது.
நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாவை முன்னிட்டு 6வது காய்கறி கண்காட்சி கோத்தகிரி நேரு பூங்காவில் நேற்று துவங்கியது. இக்கண்காட்சியை மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் முன்னிலையில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத்துறையின் அரசு முதன்மைச் செயலர் முனைவர் கண்ணன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.
இந்த கண்காட்சியில் திருப்பூர் மாவட்ட தோட்டக்கலை சார்பில் அமைக்கப்பட்டிருந்த பூசனிக்காய்களினால் வடிவமைக்கப்பட்ட சிங்கம் மற்றும் புலி, புதுக்கோட்டை மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த பசுமைக்குடில் சாகுபடி முறைகள் பலரையும் கவர்ந்தது.
அதே போன்று தஞ்சாவூர் மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த கத்தரிக்காய்களினால் ஆன சிவன்' மற்றும் 50 கிலோ வெள்ளை முள்ளங்கியினால் வடிவமைக்கப்பட்டிருந்த நந்தி' சிலை சிற்பங்கள், விழுப்புரம் மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த 50 கிலோ எடை கொண்ட கத்தரிக்காயினால் வடிவமைக்கப்பட்டிருந்த மயில்', பெரம்பலூர் மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில் பாகற்காயினால் வடிவமைக்கப்பட்டிருந்த டிராகன்', வெங்காயத்தினால் வடிவமைக்கப்பட்டிருந்த முதலை போன்றவை பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது.
மேலும், அரியலூர் மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில் கத்தரிக்காயினால் அமைக்கப்பட்டிருந்த கொரில்லா குரங்கு', காரட்டினால் அமைக்கப்பட்டிருந்த டிராகன்', நீலகிரி தோட்டக்கலைத்துறை சார்பில் 15 அடி உயரம், 15 அடி அகலமும் கொண்ட வெள்ளை முள்ளங்கியினால் வடிவமைக்கப்பட்டிருந்த அன்னப்பறவை' மற்றும் சேனைக்கிழங்கினால் ஆன முயல்' மற்றும் தனியார் அரங்குகள் என மொத்தம் 20 அரங்குகளில் அமைக்கப்பட்டிருந்த காய்கறி சிற்பங்கள், வன விலங்குகள் மற்றும் பல்வேறு நாடுகளின் ரூபாய் நோட்டுகள் ஆகியவை பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.
இதன் நிறைவு விழா மற்றும் சிறந்த அரங்குகளுக்கு பரிசளிப்பு விழா இன்று மாலை 3 மணிக்கு நடைபெற உள்ளது.