நிலக்கரி ஊழல்: விசாரணை அறிக்கையை திருத்தினார் சட்ட அமைச்சர்- சிபிஐ இயக்குநர்
பிரதமர் மன்மோகன் சிங் நிலக்கரி துறை அமைச்சக பொறுப்பை வைத்திருந்த போது நாட்டில் உள்ள நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் ரூ.1.85 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளது என்பது தலைமை கணக்கு தணிக்கையாளர் அறிக்கையின் புகார். இது தொடர்பாக சி..ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஒரு பொது நலன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் சி.பி.ஐ. சார்பில் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இந்த அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்வத்ற்கு முன்பாக பிரதமர் மன்மோகன் சிங்கை காப்பாற்றும் நோக்கத்தில் மத்திய சட்ட அமைச்சர் அஸ்வினி குமார், பிரதமர் அலுவலகம் மற்றும் நிலக்கரித்துறை அமைச்சக அதிகாரிகள் அந்த அறிக்கையில் திருத்தங்கள் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியபோது, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஹரின் ராவல், சி.பி.ஐ. விசாரணை அறிக்கையை மத்திய அரசின் அங்கமாக உள்ள எந்த நபருடனும் பகிர்ந்து கொள்ளப்படவில்லை என உறுதிபட கூறினார். ஆனால் இதுபற்றி சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்கா தாக்கல் செய்த வாக்குமூலத்தில் சி.பி.ஐ. விசாரணை அறிக்கை, மத்திய சட்ட அமைச்சர் அஸ்வினிகுமார் விருப்பப்படி அவருடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது. மேலும், பிரதமர் அலுவலகம் மற்றும் நிலக்கரித்துறை அமைச்சகத்தின் இணைச்செயலாளர் மட்ட அதிகாரிகளுடனும் அவர்கள் விருப்பப்படி பகிர்ந்து கொள்ளப்பட்டது என கூறப்பட்டது.. இதற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்ததுடன் நடந்தது என்ன? என்பது பற்றி விவராமாக புதிய அறிக்கையாகத் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து இன்று உச்சநீதிமன்றத்தில் சிபிஐ இயக்குனர் ரஞ்சித் சின்ஹா 9 பக்க புதிய விசாரணை அறிக்கை தாக்கல் செய்தார். அதில் முந்தைய சிபிஐ விசாரணை அறிக்கையில் சில வரிகளை சட்ட அமைச்சர் அஸ்வனி குமார், பிரதமர் அலுவலக அதிகாரிகள், அரசு தலைமை வழக்கறிஞர் ஆகியோர் நீக்கினர் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. எந்தெந்த வரிகள் நீக்கப்பட்டன? என்ன மாதிரியான மாற்றங்கள் செய்யப்பட்டன என்பதும் சிபிஐயின் புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விசாரணை அறிக்கையில் என்னால் ஏற்பட்ட திருத்தம் மற்றும் நீக்கம் ஆகியவற்றிற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன் என்றும் ரஞ்சித் சின்ஹாவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சிபிஐயின் இந்த புதிய அறிக்கையால் மத்திய சட்ட அமைச்சர் அஸ்வனிகுமாருக்கு மேலும் நெருக்கடி அதிகரித்துள்ளது.