கர்நாடக தேர்தல்: மீண்டும் ஆட்சியைப் பிடிக்கிறது காங்கிரஸ்-பாஜகவுக்கு பெரும் தோல்வி
பெங்களூர்: கர்நாடகத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் 70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தேர்தலுக்குப் பின் நடத்தப்பட்ட பல்வேறு எக்ஸிட் போல் கருத்துக் கணிப்புகளில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரியவந்துள்ளது.
ஆளும் பாஜக மாபெரும் தோல்வியை சந்திக்கவுள்ளது. அதே போல கெளடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் மூன்றாவது இடத்தையும், எதியூரப்பாவின் கர்நாடக ஜனதா கட்சி 4வது இடத்தையும் பிடிக்கும் என்று தெரியவந்துள்ளது.
கடந்த தேர்தலில் பாஜக 110 இடங்களையும், காங்கிரஸ் 80 இடங்களையும் மதசார்பற்ற ஜனதா தளம் 28 இடங்களிலும் வென்றிருந்தன.
மெஜாரிட்டிக்கு 112 இடங்கள் தேவை என்ற நிலையில், நேற்று நடந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வரும் 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கவுள்ள நிலையில், கருத்துக் கணிப்புகள் சொல்வதைப் பார்போம்...
சிஎன்என்-ஐபிஎன்...
சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சி நடத்திய எக்ஸிட் போலில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்கிரசுக்கு 110 முதல் 116 இடங்கள் கிடைக்கும். பாஜகவுக்கு 43 முதல் 54 இடங்களும், மதசார்பற்ற ஜனதா தளம் 43 முதல் 53 இடங்களையும் எதியூரப்பா கட்சி 16 இடங்களிலும் வெல்லும் என்று தெரியவந்துள்ளது.
ஹெட்லைன்ஸ் டுடே...
இந்தியா டுடே குழுமத்தின் ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சி நடத்திய கருத்துக் கணிப்பில் காங்கிரசுக்கு 114 இடங்கள் கிடைக்கும். பாஜகவுக்கு 55 இடங்களும், மதசார்பற்ற ஜனதா தளம் 34 எதியூரப்பா கட்சி 11 இடங்களிலும் வெல்லும்.
டைம்ஸ் நவ்...
டைம்ஸ் ஆப் இந்தியாவின் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி நடத்திய கருத்துக் கணிப்பின்படி காங்கிரசுக்கு 132 இடங்கள் கிடைக்கும். பாஜகவுக்கு 38 இடங்களும், மதசார்பற்ற ஜனதா தளம் 38 எதியூரப்பா கட்சி 11 இடங்களிலும் வெல்லும்.
பாஜக மீது கடும் வெறுப்பு:
அதே போல பப்ளிக் டிவி, சுவர்ணா டிவி, டிவி 9 உள்ளிட்ட கன்னட தொலைக்காட்சிகள் நடத்தியுள்ள கருத்துக் கணிப்புகளிலும் காங்கிரஸே வெல்லும் என்று தெரியவந்துள்ளது.
தென்னகத்தில் முதல் முதலில் அமைந்த பாஜக ஆட்சி மீது மக்களுக்கு கடும் வெறுப்பும் கோபமும் நிலவியதாகவும் இதன்மூலம் அந்தக் கட்சிக்கு மாபெரும் தோல்வியை மக்கள் தந்துள்ளதாகவும் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.