இடையன்குடியில் பிஷப் கால்டுவெல் சிலை, பீடத்தை உடைத்த வாலிபர் கைது
நெல்லை: இடையன்குடியில் பிஷப் கால்டுவேல் சிலை மற்றும் பீடத்தை உடைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்துக்கு ஒப்பிலக்கணம் தந்த பிஷப் கால்டுவெல் நினைவாக நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே இடையன்குடியில் அவர் வாழ்ந்த இல்லத்தை தமிழக அரசு நினைவு இல்லமாக அறிவித்தது. முன்னாள் முதல்வர் கருணாநிதி அதை வீடியோ கான்பிரன்ஸ் மூலம் திறந்து வைத்தார். தொடர்ந்து ரூ.19 லட்சம் செலவில் பூங்கா, முகப்பு வளைவு உள்பட பல்வேறு பணிகள் நடந்தன. இல்லத்தின் முன்பகுதியில் கால்டுவெல்லின் மார்பளவு வெண்கல சிலை அமைக்கப்பட்டது.
இந்நிலையில் இடையன்குடி சேகரம் இலக்கரிவிளையைச் சேர்ந்த சவரிமுத்து மகன் அருள்ராஜ் என்பவர் நினைவு இல்லத்திற்குள் நுழைந்து திடீரென்று சம்மட்டியால் பிஷப் கால்டுவெல் சிலையின் பக்கவாட்டு பகுதி மற்றும தலையின் பின் பகுதியை சேதப்படுத்தினார். பீடத்தில் பதிக்கப்பட்டிருந்த கிரானைட்டையும் சேதப்படுத்தினார். பின்னர் அவர் உவரி காவல் நிலையம் சென்று சரண் அடைந்தார்.
இது குறித்து இடையன்குடி பஞ்சாயத்து தலைவர் ஜேகர் உவரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சிவராஜ் பிள்ளை வழக்குப் பதிவு செய்து அருள்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். அருள்ராஜ் என்ன காரணத்திற்காக பிஷப் கால்டுவெல் சிலை, பீடத்தை சேதப்படுத்தினார் என தெரியவில்லை.
கால்டுவெல் நினைவிடத்தில் காவலர் இல்லாததால் தான் இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும், தமிழக அரசு விரைவில் காவலர்களை நியமிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் அரசை வலியுறுத்தியுள்ளனர்.