கும்பகோணத்தில் குளு குளு பஸ் ஸ்டாப்: இளைப்பாறும் மக்கள்
கும்பகோணம்: கும்பகோணத்தில் குளிர்சாதன வசதியுடன் கூடிய பயணிகள் பேருந்து நிறுத்தம் திறக்கப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நான்கு முனை சாலையில் சிட்டி யூனியன் வங்கி சார்பில் ரூ. 18 லட்சத்தில் குளிர்சாதன (ஏ.சி.) வசதி கொண்ட பயணிகள் பேருந்து நிறுத்தம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அதற்கான கடைசி கட்ட பணிகள் முடிவடைந்து திறப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
திறப்பு விழாவில் வீட்டுவசதித் துறை அமைச்சர் வைத்திலிங்கம் கலந்து கொண்டு பேருந்து நிறுத்தத்தை திறந்து வைத்தார். இந்த பேருந்து நிறுத்தத்தில் நிகழ்வுகளை கும்பகோணம் நகராட்சி அலுவலகத்தில் இருந்தவாறு கண்காணிக்கும் வகையில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் பொது தொலை பேசி வசதி, கம்ப்யூட்டர் மூலம் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பிரிண்ட் எடுத்துக் கொள்ளும் வசதி மற்றும் சிட்டி யூனியன் வங்கியின் ஏ.டி.எம். வசதியும் செய்யப்பட்டுள்ளது.