ஒரே நாளில் திருப்பதி வெங்கடாஜலபதி சுவாமியை தரிசனம் செய்யலாம்: ஐஆர்சிடிசி ஏற்பாடு
இந்தியாவில் புகழ் பெற்ற கோவில்களில் முதன்மையானது திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் ஆகும். இந்த கோவிலுக்கு தமிழகத்தில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் திசனசரி பல்லாயிரம் பேர் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.
மேலும் இந்தியாவில் உள்ள சாதாரண குடிமகன் முதல் முதல்குடிமகனான ஜனாபதி வரை இந்த கோவிலுக்கு விரும்பி செல்வதால், எப்போதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்த வண்ணம் உள்ளது.
இந்திய ரயில்வே உணவகம் மற்றும் சுற்றுலாக் கழகம் (ஐஆர்சிடிசி) சார்பில் சென்னையில் இருந்து திருப்பதிக்கு ஒரே நாளில் சென்று சாமி தரிசனம் செய்யும் புதிய சுற்றுலா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதிக்கு திங்கள் முதல் வெள்ளி வரை காலை 6.25 மணிக்கு திருப்பதி எக்ஸ்பிரசில் பக்தர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள்.
திருப்பதியில் இருந்து திருமலைக்கு பக்தர்களை அழைத்துச் சென்று உடனடி சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்படும். அன்று மாலை 5.20 மணிக்கு சப்தகிரி எக்ஸ்பிரசில் கிளம்பி இரவு 8.35 மணிக்கு சென்னை வந்தடையலாம்.
இந்த ஒரு நாள் புதிய சுற்றுலா திட்டத்திற்கு பெரியவர்களுக்கு 2ம் வகுப்பு இருக்கைக்கு ரூ 1,200 ம், முதல் வகுப்பு ஏ.சி. ரூ. 1,680 ம், சிறுவர்களுக்கு ரூ. 710 ம் கட்டணமாக நிர்ணயக்கப்பட்டுள்ளது. இதில் ரயில் டிக்கெட், திருப்பதி-திருமலை சென்று வர தனியார் வாகனம், விரைவு தரிசன கட்டணம் ரூ. 300 ஆகியவை அடங்கும்.
இதே போல, சாலை மார்க்கமாக திருப்பதிக்கு பஸ் மற்றும் வேனில் திங்கள் முதல் ஞாயிறு வரை செல்ல ஐ.ஆர்.சி.டி.சி. ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி தி.நகரில் இருந்து ஏ.சி. பஸ் மற்றும் ஏசி டெம்போ வேனில் செல்லலாம். இதற்கு பெரியவர்களுக்கு ரூ. 1,350 ம், 11 வயதுக்கு குறைவானவர்களுக்கு 1000 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. வேனில் செல்ல ரூ. 1,550 செலுத்த வேண்டும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு 044 - 64594959 என்ற எண்ணிலும், 90031 40681 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.