கோடை விடுமுறை: தலையணை அருவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள்
நெல்லை: கோடை விடுமுறையை கழிக்க சுற்றுலாப் பயணிகள் களக்காடு தலையணையில் குவிந்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பக மேற்குத் தொடர்ச்சி மலை தலையணையில் ஓடி வரும் பச்சையாற்றில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கடும் வெப்பம் நிலவி வருகிறது. வெயிலில் இருந்து தப்பிக்கவும், கோடை விடுமுறையை குடும்பத்தினருடன் கொண்டாடவும் சுற்றுலாப் பயணிகள் தலையணைக்கு படையெடுத்து வருகின்றனர்.
தலையணை தடுப்பணை அருவியில் மிதமான தண்ணீர் கொட்டுவதால் காலை முதல் மாலை வரை சுற்றுலாப் பயணிகள் அங்கு உற்சாகமாக குளித்து வருகின்றனர். அங்குள்ள பார்வை மடத்தில் இருந்தவாறு இயற்கை அழகுகளை கண்டு களிக்கின்றனர். இதையடுத்து வனத்துறையினர் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். தீவிர சோதனைக்கு பின்னரே சுற்றுலாப் பயணிகள் வனப் பகுதிக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். மது, பிளாஸ்டிக் பைகள், ஆயுதங்கள் ஆகியவற்றை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரித்துள்ளது.
இது குறித்து சுற்றுலாப் பயணிகள் கூறுகையில், தலையணையில் குளிப்பது குதூகலமாக உள்ளது. வெயிலிலும் தண்ணீர் மிகவும் குளிர்ச்சியாக உள்ளது. இதமான குளிர்ந்த காற்று வீசுகிறது. இதனால் ஊருக்கு செல்லவே மனம் இல்லை என தெரிவித்தனர்.