சரப்ஜித் மரணம் எதிரொலி: பாகிஸ்தான் எதிர்ப்புப் போராட்டத்தில் குதித்த ஆஜ்மீர் தர்கா மத குருக்கள்
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஆஜ்மீரில், குவாஜா மொய்னுதீன் சிஷ்டி என்ற முஸ்லிம் மதகுருவின் சமாதி உள்ளது.
இங்கு வந்து வேண்டுவோருக்கு, அவர்களின் பிரார்த்தனைகள் நிறைவேற அங்குள்ள மத குருக்கள் வேண்டுவார்கள். சமீபத்தில் வரும் பாகிஸ்தானின் பொதுத் தேர்தலில் கூட, வேட்பாளர்களுக்காக இங்கு பிரார்த்தனைகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் சிறையில் சரப்ஜித் மற்ற கைதிகளால் கொடூரமாகத் தாக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்ததார். இதனால் வலுப்பெற்று வரும் பாகிஸ்தான் எதிர்ப்புப் போராட்டத்தில் இந்த மதகுருமார்களும் இணைந்துகொள்ள முடிவு செய்துள்ளனர். எனவே, இனி இங்கு வரும் பாகிஸ்தானியர்களுக்காக தர்காவில் வேண்டுவதில்லை என மதகுருக்கள் முடிவெடுத்துள்ளனர்.
மே 12ம் தேதி நடைபெறவிருக்கும் மொய்னுதினின் 801-வது தின விழாவில் கலந்துகொள்ள, 640-க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் யாத்திரிகர்கள் இந்தியா வரவிருக்கின்ற சூழ்நிலையில், அப்போது வரும் பாகிஸ்தானியர்களுக்கான பிரார்த்தனைக் கூட்டத்தில் மதகுருக்கள் கலந்து கொள்வதில்லை என்று முடிவெடுத்துள்ளனர்.
இந்திய அரசு, இனிமேல் பாகிஸ்தானில் இருந்து வரும் யாத்திரிகர்களுக்கு விசா அளிப்பதை தடை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.