பிறந்த அன்றே இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை: இந்தியா 29%...சீனா 5%... அமெரிக்கா 1%
டெல்லி: இந்தியாவில் பிறந்த அன்றே இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 3 லட்சமாம், அதாவது 29 சதவீதம். சீனாவில் 5% உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
'உலக அன்னையர் நிலை - 2013' என்று சமீபத்தில் சர்வதேச ஆய்வு அறிக்கை ஒன்று இத்தகவலை வெளியிட்டுள்ளது.
மேலும், இந்தியாவில் பிறந்த முதல் நாளில் இறந்து போகும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதாக அதிர்ச்சித் தகவல் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆசியாவில் அதிகம்
உலகிலேயே தென் ஆசிய கண்டத்தில் தான் பிறந்தவுடன் இறந்து போகும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது எனவும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.
மூலக்காரணம்...
10 ஆயிரம் மக்கள் தொகைக்கு 14 டாக்டர்கள் அல்லது செவிலியர்கள் என்ற விகிதாச்சாரமும், இளம் வயது திருமணமும், கருவுற்ற தாய்மார்களின் ஊட்டச்சத்து பற்றாக்குறையும் இதற்கான மூலக்காரணம் என்பது அந்த அறிக்கையின் மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்தியா முதலிடம்...
உலகின் 176 நாடுகளில் ஏற்படும் சிசு மரணம் தொடர்பாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில் உலகிலேயே பிறந்த முதல் நாளில் இறந்து போகும் குழந்தைகளின் எண்ணிக்கையில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது.
உலகளவில் 29%...
இந்தியாவில் ஆண்டுதோறும் சராசரியாக 3 லட்சத்து 9 ஆயிரத்து 300 சிசுக்கள் பிறந்த 24 மணி நேரத்திற்குள் இறந்து விடுவதாகவும் உலகளாவிய அளவில் ஏற்படும் சிசு இறப்பில் இது 29 சதவிகிதம் எனவும் தெரிய வந்துள்ளது.
சீனால கம்மி தான்...
இந்தியாவை விட அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில் வெறும் 5 சதவிகிதம் சிசுக்களே முதல் நாளில் இறக்கின்றன.
முதல் பத்து...
இந்தியாவையடுத்து, நேபாளம், வங்காளதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் முதல் 10 இடத்தில் உள்ளன.
அமெரிக்காவில் குறைவு...
வெறும் 1 சதவிகிதம் இறப்பு விகிதத்துடன் முன்னேறிய நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.
மூட நம்பிக்கைகளே மூல காரணம்...
இந்தியாவில் 28 சதவிகிதம் குழந்தைகள் குறைந்த எடையில் பிறப்பதும், குழந்தை பிறந்தவுடன் தாய்களுக்கு சுரக்கும் முதல் தாய்ப்பால், குழந்தைகளுக்கு புகட்டத் தகுந்ததல்ல என்ற மூட நம்பிக்கையும் சிசுக்களின் இறப்புக்கு மற்றொரு காரணம் என்று அறியப்பட்டுள்ளது.
பிரசவ பலியும் அதிகம்...
மகப்பேற்றின் போது பலியாகும் இந்திய பெண்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 56 ஆயிரமாக உள்ளது எனவும் அந்த ஆய்வின் முடிவு தெரிவிக்கிறது.