ஐ.ஏ.எஸ். தேர்வில் நாலாட்டின்புதூர் தீப்பெட்டி தொழிலாளியின் மகன் வெற்றி
தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே தீப்பெட்டி தொழிலாளியின் மகன் ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்று 286வது ரேங்க் வாங்கியுள்ளார்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 97 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புதூரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் கருப்பசாமி ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்று 286வது ரேங்க் வாங்கியுள்ளார்.
தீப்பெட்டி கம்பெனியில் பணியாற்றி வந்த இவரது தந்தை ராமகிருஷ்ணன் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் இறந்தார். நாலாட்டின்புதூர் சாரதா மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் டூ வரை படித்த கருப்பசாமி பின்னர் கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் படித்து தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து சென்னையில் உள்ள டாடா கன்சல்டன்சியில் சாப்ட்வேர் என்ஜினியராக பணியாற்றினார்.
பின்னர் ஐஏஎஸ் தேர்வு எழுத வேண்டும் என்பதற்காக டெல்லி சென்ற கருப்பசாமி அங்கு இரண்டு ஆண்டுகள் அதற்கான பயிற்சி பெற்றார். இத்தேர்வில் மூன்று முறை தோல்வி அடைந்த அவர் இனி ஐ.ஏ.எஸ். தேர்வு வேண்டாம் என்ற முடிவில் இருந்தார். ஆனால் அவரை அவரது அண்ணன் கனகராஜ், அண்ணி கவிதா ஆகியோர் ஊக்கப்படுத்தினர். தற்போது 4வது முறையாக தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று 286வது இடத்தை பிடித்துள்ளார். கருப்பசாமியை அவரது உறவினர்கள், குடும்பத்தினர்கள் பாராட்டினர்.
இது குறித்து கருப்பசாமி கூறுகையில்,
எனது தந்தை தீப்பெட்டி கம்பெனியில் பணி புரிந்து என்னை படிக்க வைத்தார். எனது பெற்றோரின் ஆசையை நிறைவேற்றி உள்ளேன். ஆனால் அதை பார்க்க அவர்கள் இல்லாதது வருத்தமாக உள்ளது. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் ஐஏஎஸ் தேர்வு எழுதினேன். எனது லட்சியத்தை நிச்சயம் நிறைவேற்றுவேன் என்றார்.