அமெரிக்காவில் 'சின்னத்தம்பி'... யோகாவை தூளியில் 'தொங்க விட்டு காசு பார்க்கிறார்
வாஷிங்டன்: நம்மவர்களின் ஐடியாக்களை செதுக்கி, வேறு முலாம் பூசி அழகோடு, காசும் பார்க்கும் கில்லாடிகள் அயல் நாட்டவர்கள். இப்போது அமெரிக்காவில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கும் ‘தொட்டில் யோகா' கான்செப்டும் அப்படித்தான்....
எப்படியெல்லாம் காசு பார்க்கலாம் என்பதற்கு அமெரிக்கர்களை நல்ல உதாரணமாக கூறலாம். சிகிச்சைக்காக இந்தியா வந்த இடத்தில் யோகாவைக் கற்றுக் கொண்டு அதை அப்படியே உல்டாவாக்கி - அதிலும் கூட நம்ம ஊர் தொட்டிலை பயன்படுத்தி - பெரிய அளவில் காசு பார்த்து வருகிறார் ஒரு அமெரிக்கர்.
அந்த அமெரிக்கரின் பெயர் கிறிஸ்டோபர் ஹாரிஸன். இவர் செயல்படுத்தி வரும் யோகாவுக்குப் பெயர் ஆன்டி கிராவிட்டி யோகா. அதாவது நம்ம ஊரில் குழந்தைகளை தூங்க வைக்க பயன்படுத்துவோமே சேலை தொட்டில்.... அதைத்தான் இவர் தனது யோகாவுக்கு பயன்படுத்தி வருகிறார்.
பார்க்கவே படு காமெடியாக இருக்கும் இந்த யோகாதான் இப்போது அமெரிக்காவில் ரொம்பப் பிரபலமாம். அத்தனை பேரும் போட்டி போட்டுக் கொண்டு தொட்டிலில் தொங்கி ஆடிக் கொண்டிருக்கிறார்களாம்.
யாருடா ஹாரிஸன்...
இந்த ஹாரிஸன் ஒரு நடனக்காரர். பிசியோதெரப்பிஸ்ட்டும் கூட. பல ஹாலிவுட் பிரபலங்களுக்கு பிசிக்கல் பிட்னஸ் அட்வைஸராகவும் இருக்கிறார்.
முதல்ல சஸ்பென்ஷன் டிரெய்னிங்...
ஆரம்பத்தில் சஸ்பென்ஷன் டிரெய்னிங் என்ற பெயரில் பிட்னஸ் வகுப்புகளை இவர் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போதுதான் இந்தியாவுக்கு வரும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்ததாம்.
ஓயாத ஆட்டம்... விலகிய மூட்டுக்கள்
1996 ம்ஆண்டு இந்தியாவில் நடந்த மிஸ் இந்தியா போட்டியின் போது நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டாராம் ஹாரிஸன். அப்போது டான்ஸ் ஆடியதில் மூட்டுவிலகி விட்டதாம். இதனால் யோகாசனம் மூலம் சிகிச்சை எடுத்துள்ளார்.
யோகா மீது மோகம்...
அப்போதுதான் யோகா மீது அவருக்கு மோகம் பிறந்ததாம். இதனால் ஊர் திரும்பியதும் யோகாவையும், அதோடு தொட்டிலையும் ஒன்றுசேர்த்து ஆன்டி கிராவிட்டி யோகாவை உருவாக்கி களம் இறக்கினார்... இப்போது காசு பார்க்கிறார்.
தொங்க விட்டு காசு பார்க்கிறார்...
இவரது ஆன்டி கிராவிட்டி யோகாவுக்கு இப்போது நல்ல கிராக்கியாம். நிறையப் பேர் இவரது மையத்திற்கு வந்து அங்கு கட்டி வைக்கப்பட்டிருக்கும் தொட்டிலில் விதம் விதமாக தொங்கியும், ஆடியும், யோகா செய்தும் உடம்பையும், மனசையும் பிட்டாக்கி வருகிறார்களாம்.
கொஞ்சம் யோசிங்கப்பா...
நம்மவர்களுக்கு ஏன் இப்படி ஒரு யோசனை தோன்றாமல் போனது... ஒருவேளை குழந்தைகளுக்கு மட்டும் தான் தொட்டில்னு குறுக்கிக்கிட்ட மனப்போக்கு தான் காரணமோ...