சிபிஐ சொல்வது என்ன?
A. இந்த விவகாரம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வரும் சிபிஐயின் இயக்குனர் ரஞ்சித் சின்ஹா கடந்த ஏப்ரல் 26ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ஒரு அபிடவிட் தாக்கல் செய்கிறார். அதில், இந்த ஊழல் குறித்த எங்களது விசாரணை அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் முன், சட்ட அமைச்சர் அஸ்வின் குமார், பிரதமர் அலுவலகத்தைச் சேர்ந்த இணைச் செயலாளர்கள் (Joint Secretary-level officers) மடத்திலான அதிகாரிகள் மற்றும் நிலக்கரித்துறை அமைச்சகத்திடம் பகிர்ந்து கொண்டோம் என்று பகீர் தகவலை வெளியிடுகிறார்.
ஊழலுக்கு ஆளாகியுள்ள மத்திய அரசின் மீது நடத்தப்பட்டு வரும் ஒரு விசாரணை தொடர்பான அறிக்கையை பிரதமர் அலுவலகம், நிலக்கரித்துறை, சட்டத்துறை வாங்கிப் பார்க்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழுகிறது. அறிக்கையை வெறுமனே வாங்கிப் பார்த்தார்களா அல்லது அதில் ஏதாவது திருத்தம் செய்தார்களா என்ற சந்தேகம் எழுந்தது.
B. இந் நிலையில், ஏப்ரல் 29ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ இன்னொரு அறிக்கை தாக்கல் செய்கிறது. அதில், நாங்கள் மத்திய அரசிடம் கொடுத்த அறிக்கையில் 20 சதவீதம் அவர்களால் (பிரதமர் அலுவலகம், நிலக்கரித்துறை, சட்டத்துறை) திருத்தப்பட்டது என்று அடுத்த குண்டை போடுகிறது.
C. இந்த விவகாரத்தில் சிபிஐ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதாடி வந்த மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஹரின் ராவல் தனது பதவியை ராஜினாமா செய்கிறார். இந்த அறிக்கை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை இவர் தவறாக வழிநடத்தியதாக புகார் எழுந்ததே இந்த ராஜினாமாவுக்குக் காரணம்.
D. இதையடுத்து நீதிபதிகள் லோதா, மதன் லோகூர், குரியன் ஜோசப் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச், சிபிஐயின் அறிக்கையை 'அவர்கள்' (பிரதமர் அலுவலகம், நிலக்கரித்துறை, சட்டத்துறை) என்னென்ன திருத்தங்கள் செய்தார்கள் என்பது குறித்து விரிவான அறிக்கைய தாக்கல் செய்யுமாறு சிபிஐக்கு உத்தரவிடுகின்றனர்.
E. மத்திய அரசின் உத்தரவுகளுக்கு ஏற்ப சிபிஐ ஆட வேண்டியதில்லை என்று இரு தரப்புக்குமே சூடும் போட்டனர் நீதிபதிகள்.