ரூ. 1.86 லட்சம் கோடி நிலக்கரி ஊழல்: என்ன நடந்தது... எப்படி நடந்தது?!
தணிக்கை அதிகாரியான சிஏஜி சொல்லும் குற்றச்சாட்டுகள் என்ன?:
2004ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை நாட்டில் நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஒதுக்கியதில் நடந்த ஊழலில் நாட்டுக்கு ரூ. 1.86 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்பது தான் இந்த ஊழலில் முக்கியமான கரு.
இது குறித்து மத்திய தணிக்கை அதிகாரியான சிஏஜி வெளியிட்ட அறிக்கையில்,
A. 2005ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை 57 நிலக்கரி சுரங்களை மத்திய அரசு ஏலம் விடாமல் தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கியது.
B. நிலக்கரியின் 2010-11ம் ஆண்டு சந்தை விலை, நிலக்கரியை வெட்டி எடுக்க ஆகும் செலவு ஆகியவற்றை ஒப்பிடுகையில், இந்த தனியார் நிறுவனங்களுக்கு கிடைத்துள்ள லாபம் ரூ. 1.86 லட்சம் கோடி.
C. நிலக்கரி சுரங்கங்களை ஏலத்தில் பங்கேற்பதற்கு 2004ம் ஆண்டு ஜூன் 28ம் தேதி தான் கடைசி நாள் என்று மத்திய அரசு ஒரு பக்கம் டெட்லைன் எல்லாம் போட்டது. இது ஒருபக்கம் இருக்க இன்னொரு பக்கம் ஒரு கமிட்டியை வைத்துக் கொண்டு (screening committee) 2009ம் ஆண்டு வரை நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஒதுக்கிக் கொண்டே வந்தது. அதாவது ஏலம் விடப் போவதாக ஒரு அறிவிப்பு.. அதே நேரத்தில் ஏலமே விடாமல் ஒரு கமிட்டி மூலமாக நிலக்கரி சுரங்கங்கள் தனியாருக்கு ஒதுக்கப்பட்டு கொண்டே வந்தது.
D. ஏலம் விடுவதை மத்திய அரசு தாமதப்படுத்தாமல் இருந்திருந்தால் அந்த லாபம் நாட்டுக்கு வந்து சேர்ந்திருக்கும்.