வாயில் புகுந்த கொசுவை தூ...வென்று துப்பிய 3 இளைஞர்களுக்கு சரமாரி அடி
டெல்லி: வாய்க்குள் கொசு புகுந்து விட்டதால், அதை வீட்டு முன்பு தூ வென்று துப்பிய மணிப்பூர் இளைஞர்களை டெல்லியைச் சேர்ந்த இருவர் சரமாரியாக தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தெற்கு டெல்லியில் உள்ள முனிர்கா பகுதியைச் சேர்ந்தவர் ஆதர்ஷ்குமார். இவரது வீட்டு முன்பு 25 வயதான ரோனி, 23 வயதான சேஜன் குட்டே, 25 வயதான சாம்சன் ஆகிய மூன்று மணிப்பூர் இளைஞர்கள் பேசி்க கொண்டிருந்தன்.
அப்போது அவர்களில் ஒருவர் திடீரென ஆதர்ஷ்குமார் வீட்டு வாசலில் துப்பியுள்ளார். இதைப் பார்த்த ஆதர்ஷ்குமாரும், அவரது மகன் ஆசிஷ் குமாரும், வேறு சிலரும் விரைந்து வந்தனர். மூன்று மணிப்பூர் இளைஞர்களையும் ஏன் எச்சில் துப்பினீர்கள் என்று கேட்டு சரமாரியாக தாக்கினர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மூன்று பேரும் லேசான காயமடைந்தனர். பின்னர் போலீஸாருக்குத் தகவல் போய் அவர்கள் விரைந்து வந்தனர். அவர்களிடம் ரோனி கூறுகையில், பேசிக் கொண்டிருந்தபோது வாயில் கொசு புகுந்து விட்டது. இதனால் நான் வேகமாக துப்பினேன். வேண்டும் என்றே நான் துப்பியதாக நினைத்து மூவரையும் அடித்து விட்டனர் என்றார்.
அடிபட்ட மூவரில் ஒருவருக்கு காது சவ்வு கிழிந்து விட்டதாம்.