கருணாநிதி குடும்ப பஞ்சாயத்து: மு.க.முத்து மகன் அறிவுநிதி மீதான புகார் வாபஸ்
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் பேரன் அறிவுநிதி மீது அவரது தந்தை மு.க.முத்து, அளித்திருந்த புகாரை திருப்பப் பெறுவதாக சென்னை பெருநகர காவல்துறைக்கு அஞ்சல் மூலம் பதிவுத் தபாலில் கடிதம் வந்துள்ளது.
சென்னை பெருநகர காவல்துறையின் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கடந்த 29ம் தேதி கலந்துக் கொண்ட மு.க.முத்துவின் மனைவி சிவகாமசுந்தரி, தனது மகன் அறிவுநிதி மீது புகார் தெரிவித்து இரு மனுக்களை அளித்தார்.
கோபாலபுரம் வீட்டை அறிவுநிதி ஏமாற்றி அபகரித்துக் கொண்டதாகவும், அதனால் தாங்கள் கஷ்டப்படுவதாகவும் கூறியிருந்தார். மேலும் அறிவுநிதியிடமிருந்து அச்சுறுத்தலும், மிரட்டலும் இருப்பதால் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்த புகார் மனுவை மு.க.முத்து எழுதியிருந்தார்.
இந்த புகார் மனுக்கள் குறித்து தனிப்படையினர் மு.க.முத்துவிடமும், சிவகாமசுந்தரியிடமும் நேரடியாக விசாரணை செய்தனர்.
அப்போது புகாரில் தான் குறிப்பிட்டது அனைத்தும் உண்மையே என முத்து கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் மு.க.முத்துவிடமிருந்து சென்னை பெருநகர காவல்துறைக்கு திங்கள்கிழமை ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தில், "எங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னையைப் பேசி தீர்த்துக் கொண்டோம், நாங்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம். அந்தப் புகாரை திரும்ப பெறுகிறேன்' என்று குறிப்பிடப்பட்டிருந்ததாம். அந்தக் கடிதத்தை எழுதியது முத்துதான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே மு.க.முத்து புகார் கொடுத்ததை அவமானமாக கருதிய கருணாநிதியின் குடும்பத்தினர், முத்துவை சமாதானப்படுத்தியுள்ளனர். இதனையடுத்தே மகன் மீது அளித்த புகாரை திரும்ப பெறுவதாக மு.க.முத்து கடிதம் அனுப்பி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.