கர்நாடகா வெற்றி எதிரொலி- ஆந்திராவில் சிரஞ்சீவியை காங்.முதல்வர் வேட்பாளராக அறிவிக்க கோரிக்கை!
ஆந்திர மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி ...இவைகளுக்குப் பிறகு இடதுசாரிகள், பாஜகவினர் என்றுதான் செல்வாக்கு இருந்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு திடீரென பிரஜா ராஜ்யம் என்ற கட்சியை உருவாக்கி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியவர் நடிகர் சிரஞ்சீவி. பின்னர் கட்சியை காங்கிரஸுடன் ஐக்கியப்படுத்திவிட்டு அண்மையில்தான் மத்திய அமைச்சராகவும் பதவி ஏற்றார். அதே நேரத்தில் ஆந்திர மாநில அரசியலிலும் சிரஞ்சீவி தீவிர கவனம் செலுத்தத் தொடங்கினார்... இதே காலத்தில் ஆந்திர மாநிலத்தில் முதல்வர் கிரண்குமாருக்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கட்சி மேலிடத்துக்கு ஏராளமான புகார்களைத் தட்டிவிட்டனர். .
இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் ஹைதராபாத்- கர்நாடகா பகுதியான ஆந்திர மாநில எல்லை மாவட்டங்களில் சிரஞ்சீவி சூறாவளி பிரச்சாரம் செய்தார். சிரஞ்சீவிக்கு ஏராளமான கூட்டம் கூடியது. இந்த ஜோரில் கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற ஆந்திர மாநிலத்துக்கும் இந்த வெற்றி ஜூரம் பரவிவிட்டது.
2014ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் சிரஞ்சீவியைத்தான் முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. சிரஞ்சீவியை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால் ஆந்திராவில் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும் என்பது அவரது ஆதரவாளர்களின் கருத்தாக இருக்கிறது. கிரண்குமார் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பல அமைச்சர்களும் கூட இந்த கோஷத்தை எழுப்பி வருகின்றனர்,. அமைச்சர்களைப் போல பல எம்.பி.க்களும் கூட கிரண்குமாருக்கு எதிராக சிரஞ்சீவியை முன்னிறுத்த தொடங்கியிருக்கின்றனர். கர்நாடகாவைத் தொடர்ந்து ஆந்திர காங்கிரஸிலும் தேர்தல் ஜூரம் ஓராண்டுக்கு முன்பே களைகட்டத் தொடங்கவிட்டது!
சிரஞ்சீவி இன்னொரு என்.டி.ஆர். ஆவாரா?