குமாரசாமி மனைவியை தோற்கடித்த சமாஜ்வாடி வேட்பாளர்! கடுப்பில் கவுடா குடும்பம்!!
தேவகவுடா மகன்கள் வெற்றி- மருமகள் தோல்வி
முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவருமான தேவகவுடாவின் மகன் குமாரசாமி ராம்நகரா தொகுதியிலும், மற்றொரு மகன் ரேவண்ணா, ஹொளேநரசிபுரா தொகுதியிலும் போட்டியிட்டனர். இவர்கள் இருவரும் வெற்றி பெற்றுவிட்டனர். ஆனால் சென்னபட்ணா தொகுதியில் போட்டியிட்ட தேவகவுடாவின் மருமகளும் குமாரசாமியின் மனைவியுமான அனிதா தோல்வி அடைந்திருக்கிறார். அவரை தோற்கடித்தது சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த யோகேஸ்வர் என்பது குறிப்பிடத்தக்கது. தேவகவுடா குடும்பத்தில் 2 பேர் எம்.எல்.ஏ. ஆகி அக்கட்சி 40 தொகுதிகளைக் கைப்பற்றி பெரும் மகிழ்ச்சியில் இருந்தாலும் அவரது குடும்பத்து மருமகள் தோற்றுப் போன அதிருப்தியில் வெற்றியைக் கொண்டாட முடியாமல் அவர்கள் செம கடுப்பில் இருந்தனராம்!
நடிகை குட்டி ராதிகா ..
குமாரசாமிக்கு முதலில் அனிதாவுடன் திருமணம் நடைபெற்றது. இந் நிலையில்தான் 2011ம் ஆண்டு நடிகை குட்டி ராதிகாவும் குமாரசாமியும் ரகசியமாக குடும்பம் நடத்திய தகவல் ஊர் உலகத்துக்கே தெரியவந்தது .இதற்கான புகைப்படங்களும் அப்போது வெளியாகி பரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனால்தான் என்னவோ பொதுவாக ஊடகங்கள் 'குமாரசாமியின் மனைவி தோல்வி' என்று போடாமல் குமாரசாமியின் மனைவி 'அனிதா' தோல்வி என்று பெயரோடு செய்திகளை பதிவு செய்திருக்கின்றனர்... (ஆமாங்க குழப்பம் வரக்கூடாதுல்ல எந்த மனைவின்னு....!!)
(குமாரசாமி- குட்டி ராதிகா தொடர்பான செய்தி)
யார் இந்த யோகேஸ்வர்?
2008ம் ஆண்டு இதே சென்னபட்ணா தொகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யோகேஸ்வர். அப்புறம் ஆளும் பாஜகவுக்கு தாவி அமைச்சரானார். தேர்தல் நெருங்கும் நிலையில் காங்கிரஸ் கட்சிக்குத் தாவினார். ஆனால் காங்கிரஸ் கட்சியில் தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்கப்படவில்லை. இதனால் வேறுவழியில்லாமல் சமாஜ்வாடி கட்சியில் இணைந்து போட்டியிட்டார். இவரை ஆதரித்து உத்தரப்பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் கூட கர்நாடகாவில் பிரசாரம் செய்தார். யோகேஸ்வரா தமது தேர்தல் பிரச்சாரத்தின் போது வீட்டு மனை தருகிறேன்.. அப்பார்ட்மென்ட் தருவேன் என்று வாக்குறுதிகளை அள்ளி வீசிய சர்ச்சை நபர் என்ற பெயரும் உண்டு.
தென்னகத்தின் முதல் சமாஜ்வாடி எம்.பி. பங்காரப்பா
தென்னிந்திய மாநிலங்களில் சமாஜ்வாடியில் இணைந்த விவிஐபி யார் என்றால் கர்நாடக முன்னாள் முதல்வர் பங்காரப்பாதான். அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்தார்.. பின்னர் தனிக்கட்சி தொடங்கினார்.. பின்னர் பின்னர் என கட்சிகள் மாறிக் கொண்டே இருந்தார். 2004ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு தேர்வானார். 2005ஆம் ஆண்டு பாஜகவில் இருந்து வெளியேறினார். பின்னர் சமாஜ்வாடி கட்சி சார்பில் 2005ஆம் ஆண்டு ஷிமோகா தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று தென்னகத்தின் முதலாவது சமாஜ்வாடி எம்.பியானார். அதன் பின்னர் சமாஜ்வாடியை விட்டு வெளியேறி காங்கிரஸில் ஐக்கியாகி மறையும் வரை அதே கட்சியில் இருந்தார் என்பது தனிக்கதை..
தென்னகத்தின் முதல் சமாஜ்வாடி எம்.எல்.ஏ.யோகேஸ்வர்
தற்போது தென்னகத்தின் முதல் சமாஜ்வாடி எம்.எல்.ஏ. என்ற பெருமையை தட்டிச் சென்றிருக்கிறார் யோகேஸ்வர். இவரும் சமாஜ்வாடி கட்சியிலே நிலைப்பாரா? அல்லது ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் தாவிவிடுவாரா? என்பது போகப் போக தெரியும்..