அமைச்சரவைக் கூட்டம்: பன்சால் வரவில்லை - பதவியிலிருந்து விரைவில் நீக்கம்?
அதேபோல சிபிஐ அறிக்கையில் கை வைத்து சுப்ரீம் கோர்ட்டின் கடும் கண்டனத்துக்குள்ளான சட்ட அமைச்சர் அஸ்வனி குமாரும் விரைவில் தூக்கப்படவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
பிரதமரின் இல்லத்தில் இன்று மாலை பிரதமர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. அதில் பன்சால் பங்கேற்கவில்லை. அதேசமயம் அஸ்வனி குமார் பங்கேற்றார்.
பன்சால் மீது ரயில்வே வாரிய ஊழல் மற்றும் நிலக்கரி பேர ஊழல் வழக்குகளில் பெயர் அடிபட்டு கெட்டுப் போயுள்ளது. இதனால் காங்கிரஸும் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. தான் ராஜினாமா செய்வதாக ஏற்கனவே பன்சால் கட்சி மேலிடத்திடம் தெரிவித்துள்ளார். இருப்பினும் இதுவரை ராஜினாமா ஏற்கப்படாமல் உள்ளது. ஆனால் நாடாளுமன்றத்தை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் ஸ்தம்பிக்க வைத்து வருவதால் பன்சால் நீக்கப்படலாம் என்று தெரிகிறது. இதனால்தான் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் பன்சால் பங்கேற்கவில்லை என்றும் பேசப்படுகிறது.
பன்சாலை நீக்க பிரதமர் தீவிரமாக இருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன. அதேபோல அஸ்வனி குமாரும் நீக்கப்படலாம் என்று தெரிகிறது. இதன் மூலம் எதிர்க்கட்சிகளின் வாயை அடைக்க முடியும் என்று பிரதமரும், காங்கிரஸும் கருதுவதாக தெரிகிறது.