டிவி நிருபராக மாறி ஜஸ்வந்த் சிங்கை பேட்டி கண்ட ப.சிதம்பரம்
நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய நிதியமைச்சரைப் பார்த்த செய்தியாளர்கள் அவரிடம் கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது குறித்து பேட்டி காண வந்தனர். அவரும் பேட்டியளிக்க தயாரானபோது நாடாளுமன்றத்தில் இருந்து பாஜக தலைவர் ஜஸ்வந்த் சிங் வெளியே வந்தார். அவரைப் பார்த்த சிதம்பரம் ஒரு டிவி நிருபர் கையில் இருந்த மைக்கை வாங்கி ஜஸ்வந்த் சிங்கை பார்த்து கர்நாடக சட்டசபை தேர்தல் வெற்றி, காங்கிரஸுக்கு வெற்றி தானே? உங்கள் கருத்து என்ன? என்று கேட்டார்.
அதற்கு ஜஸ்வந்த் சிங் சிரித்துக் கொண்டே, மக்கள் ஆட்சி முறைக்காக வாக்களிக்கின்றனர். ஆட்சி செய்யும் முறை சரி இல்லை என்றால் மக்கள் உங்களை வெளியேற்றிவிடுவார்கள் என்றார்.
அதற்கு சிதம்பரம், ஜஸ்வந்த் ஒரு ஜென்டில்மேன் என்று கூறிவிட்டு மைக்கை திருப்பிக் கொடுத்தார்.
மக்கள் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அனைத்து அரசியல் கட்சிகளும் உணர வேண்டும் என்று சிதம்பரம் தெரிவித்தார்.