வறட்சி... மின் பற்றாக்குறை... பள்ளிகள் விடுமுறை: பனாமா
பனாமா சிட்டி: பனாமாவில் கடும் வறட்சி நிலவுவதால், மின்சாரப் பற்றாக்குறை காரணம் காட்டி பள்ளிகளை மூடச் சொல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
பனாமா நாட்டில் உற்பத்தியாகும் மின்சாரம், நீரிலிருந்தே பெரும்பாலும் எடுக்கப்படுகிறது. தற்போது அங்கு மழை பொய்த்துள்ளதால், அந்நாட்டின் மின்சார உற்பத்தியும் பாதித்துள்ளது. இதனால், அரசாங்கம் மின்சார சிக்கனத்தை தீவிரப்படுத்தியுள்ளது.
மின் பற்றாக்குறையின் எதிரொலியாக,பள்ளிகளை மூடச் சொல்லி உத்தரவிட்டுள்ள அரசு, அரசாங்க நிறுவனங்களில் பணிபுரியும் நேரத்தையும் குறைத்துள்ளது. மூன்றில் ஒரு பங்கு நாட்டை, வறட்சிப் பகுதியாகவும் அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பொழுதுபோக்குக்கு தடை...
மதுபானக் கடைகள், இரவு விடுதிகள், சினிமா தியேட்டர்கள், பல்பொருள் அங்காடிகள் போன்றவை அனைத்தும் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் எட்டு மணி நேரம் கட்டாயமாக மூடப்பட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஏசி இல்லாமல் வேலை...
வியாபார நிறுவனங்கள் அனைத்தும், தினமும் எட்டு மணி நேரம் குளிர்சாதன வசதி இன்றி செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. இத்தகைய ஏற்பாடுகள் நிலைமை மோசமடையாமல் தடுக்கும் என்று அமைச்சர் ரொபர்ட்டோ ஹென்றிகுவெஸ் தெரிவித்துள்ளார்.
ப்ளீஸ்.. மின்சாரத்தை சேமியுங்கள்...
அதிபர் ரிக்கார்டோ மார்டினெல்லியும், மழை இல்லாததால் மின்சாரப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதைக் குறிப்பிட்டு மின்சாரத்தை சேமிக்கவேண்டும் என்று மக்களைக் கேட்டுக்கொண்டார்.
பொருளாதார வளர்ச்சி...
கடந்த 2012ஆம் ஆண்டு, லத்தின் அமெரிக்க நாடுகளில், பனாமா 10 சதவிகிதம் அதிக பொருளாதார வளர்ச்சியைக் கொண்டிருந்தது என்று அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஞாயிறு ஆய்வு...
வரும் ஞாயிறன்று, அரசு அதிகாரிகள் பள்ளிகளைத் திறப்பது குறித்தும், மின்சாரத் தடை உத்தரவுகளை நீக்குவது குறித்தும் ஆய்வு செய்ய இருப்பதாகத் தெரிவித்தனர்.
சேமிப்பே சிறந்தது...
ஆயினும் மழை குறித்து எந்த அறிக்கையும் இல்லாத நிலையில், மக்கள் மின்சாரத்தை சிக்கனமாகச் செலவழிப்பதே சிறந்த வழியாகும் என்று அவர்கள் தெரிவித்தனர்.