பங்களாதேஷ் கட்டிடம் இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 892-ஆக உயர்வு
டாக்கா: பங்களாதேஷில் ஜவுளி தொழிற்சாலை கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 892 ஆக உயிரிழந்துள்ளது. நேற்றிரவு நடைபெற்ற மீட்டு பணிகளின் போது இடிபாடுகளிலிருந்து சுமார் 80 உடல்கள் மீட்டகப்பட்டன.
தலைநகர் டாக்காவுக்கு அருகே உள்ள சவர் (Savar) என்ற இடத்தில் ராணா பிளாசா என்ற 8 அடுக்கு மாடி கட்டிடம் ஒன்று கடந்த 24ம் இடிந்து விழுந்தது. 16 நாட்கள் ஆகியும் அங்கு மீட்டுப்பணிகள் நடைபெற்று வருகின்றன. விபத்து நேரிட்டபோது எத்தனை ஊழியர்கள் இருந்தனர் என்பது இதுவரை உறுதியாகவில்லை.
இதுவரை 892 உடல்கள் வரை மீட்கப்பட்டுள்ளன. மேலும் 100-க்கும் மேற்பட்ட உடல்கள் புதைந்திருக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
கட்டட விதிகளை மீறியதற்காகவும், அலட்சியத்தால் உயிர்சேதம் ஏற்படுத்திய குற்றத்திற்காகவும் அந்த கட்டடத்தின் உரிமையாளர் சோஹல் ராணாவிற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தினை தொடர்ந்து டாக்காவில் செயல்பட்டு வந்த 18 ஜவுளி தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.
தீ விபத்தில் 8 பேர் பலி
இதனிடையே இன்று டாக்காவில் உள்ள ஜவுளி தொழிற்சாலையில் நடைபெற்ற தீ விபத்தில் 8 பேர் வரை உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.