அடடே, சீனாவிடம் ஏன் எங்க நாட்டுக்குள் ஊடுறுவுனீங்கன்னு கேட்கலையே... சொல்கிறார் குர்ஷித்
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை நாளுக்கு நாள் பெரும் கேலிக்கூத்தாகி வருகிறது. பாகிஸ்தானிடம் மட்டும் அவ்வப்போது சீறுவதையே பெரிய வெற்றி போல பேசி வருகிறது இந்தியா. ஆனால் சீனா நமது நாட்டுக்குள் தைரியமாக வந்து உட்கார்ந்து கொண்டபோது ஒன்றுமே பேசவில்லை இந்தியா. அதேபோல இலங்கைக்காரர்கள் தமிழக மீனவர்களை தொடர்ந்து தாக்கி வரும்போதும் அதுகுறித்துக் கவலைப்படுவதே இல்லை. இப்படிப் போய்க் கொண்டிருக்கிறது இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை.
இந்த நிலையில், சீனா சென்ற மத்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித், சீன ராணுவத்தின் ஊடுறுவல் குறித்து அவர்களிடம் எதுவுமே கேட்கவில்லை என்று சொல்லியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், லடாக் பகுதிக்குள் சீன ராணுவம் ஊடுறுவி வந்தது இரு நாட்டு உறவுகளில் ஒரு கறையாக மாறியுள்ளது. இதற்கான காரணம் குறித்து சீன அரசு இதுவரை எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை.
எனது சீனப் பயணத்தின்போதும் நான் அதுகுறித்து கேட்கவில்லை. குறிப்பாக சீன வெளியுறவு அமைச்சர் வாங் யூயியிடம் இதுகுறித்து நான் எதுவும் பேசவில்லை. பிரச்சினை முடிந்தது குறித்து வாங் திருப்தி தெரிவித்தார். நானும் அதையே செய்தேன். இந்தப் பிரச்சினைக்கான காரணத்தை ஆராய்ந்தால் அது பல சிக்கல்களையே தோற்றுவிக்கும்.
சீனத் தரப்பிலும் இதுகுறித்து விரிவாகப் பேசவில்லை.நாங்களும் கேட்கவில்லை. இந்த ஆக்கிரமிப்புக்கு சீன அரசு தூண்டுதலாக இருந்ததா என்பது குறித்து நாம் பேச முடியாது. அதுகுறித்து கருத்து தெரிவிக்க முடியாது. நடந்தது தொலைதூரத்தில் உள்ள பகுதி. அரசுக்கு இதுகுறித்துத் தகவல் வரவே நீண்ட நேரமாகும். எனவே இதுகுறித்த ஆய்வுகள் முடிய நீண்ட நாட்கள் ஆகும் என்றார் அவர்.
குர்ஷித் இன்று சீனப் பிரதமர் லீ கெகாங்கை சந்திக்கிறார்.