இணை நிதி அமைச்சராக இருந்தபோதும் முறைகேடு.. பன்சால் 'பணால்' ஆவது உறுதி!!
ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சாலின் மருமகன் ரயில்வே துறை நியமனங்களுக்கு லஞ்சம் வாங்கியதாக சிபிஐயால் கைது செய்யப்பட்டார். இந்தப் புயல் மெதுமெதுவாக நகர்ந்து இந்த லஞ்ச விவகாரத்தில் பவன்குமார் பன்சாலுக்கும் பங்கு இருக்கிறது என்று கரையைக் கடந்தது. இதனால் பவன்குமார் பன்சால் ராஜினாமா செய்தாக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி நாடாளுமன்றத்தை முடக்கி வைத்தன.
இந்த நிலையில் நேற்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பவன்குமார் பன்சால் கலந்து கொள்ளவில்லை. இதனால் அவர் நீக்கப்படுவார் அல்லது ராஜினாமா செய்வார் என்று கூறப்பட்டது. இதனால் மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிந்தைய செய்தியாளர்கள் கூட்டம் நடத்தப்படவில்லை.
இந்த நிலையில் பவன்குமாரிடம் ரயில்வே லஞ்சம் பற்றி மட்டுமின்றி அவர் நிதித்துறை இணை அமைச்சராக இருந்த போது ஈடுபட்ட முறைகேடுகள் தொடர்பாகவும் சிபிஐ விசாரணை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நிதித்துறை இணை அமைச்சராக பவன்குமார் இருந்த போது கனரா வங்கியின் இயக்குநர்களாக மனைவி, மகள்களை நியமித்திருந்தார் எனபதுடன் தமது குடும்பத்தினருக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் கனரா வங்கி கடன் கொடுக்கவும் உதவி செய்தார் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் திரட்டிய பிறகு சிபிஐ பவன்குமார் பன்சாலிடம் விசாரணை நடத்தும் என டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படி பவன்குமார் பன்சால் மீது அடுத்தடுத்து ஊழல் புகார்கள் ரெக்கை கட்டி பறந்து வருவதால் நிச்சயம் அவரது பதவி பறிபோவது உறுதி என்றே கூறப்படுகிறது. எந்த நிமிடத்திலும் பவன்குமார் பன்சால் பதவி பறிக்கப்படலாம் அல்லது அவரே ராஜினாமா செய்யலாம் எனத் தெரிகிறது.