திமுக முன்னாள் அமைச்சர் நாஞ்சில் மனோகரன் மனைவி மரணம்
சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் நாஞ்சில் மனோகரனின் மனைவி இந்திரா(78) இன்று காலை சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் மரணமடைந்தார்.
திமுகவைச் சேர்ந்த நாஞ்சில் மனோகரன் மூன்று முறை தென் சென்னை மக்களவைத் தொகுதி உறுப்பினராகவும், நான்கு முறை தமிழக சட்டபேரவை உறுப்பினராகவும், எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும், கருணாநிதி அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தில் துணைப் பொதுச் செயலாளராகவும் பதவி வகித்துள்ளார்.
இல்லத்துப்பிள்ளைமார் சமுதாயத்தைச் சேர்ந்த அவர் நாகர்கோவிலில் பிறந்தார். அவரது மனைவி பெயர் இந்திரா. அவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 2000ம் ஆண்டு நாஞ்சில் மனோகரன் காலமானார். இதையடுத்து அவரது மனைவி இந்திரா தனது மகன்களுடன் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக இந்திரா உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இதனால், சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று (10.05.2013) காலை சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. இந்திரா மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.