கர்நாடக முதல்வர் பதவி.. ஏமாந்த மல்லிகார்ஜூன கார்கேவுக்கு ரயில்வே அமைச்சர் பதவி?
பவன்குமார் பன்சால், அஸ்வனிகுமார் இருவரது ராஜினாமாவை பிரதமரும் ஜனாதிபதியும் ஏற்றுக் கொண்டனர். இதனால் மத்திய அமைச்சரவையில் காலி இடங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. ஏற்கெனவே காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க. விலகியதால், அக்கட்சியின் 5 அமைச்சர்களும் ராஜினாமா செய்தனர். தற்போதைய சூழலில் முக்கிய அமைச்சகங்களான ரயில்வே, உரம், சட்டம் உள்ளிட்ட 10 அமைச்சர்கள் நியமிக்கப்பட வேண்டிய நிலை இருக்கிறது. தற்போது இது கூடுதல் பொறுப்பாக சிலரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தாலும் புதிய அமைச்சர்களை நியமிக்க வேண்டும் என்பதால் காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன் மன்மோகன்சிங் ஆலோசனை நடத்தினார். இதனால் மத்திய அமைச்சரவையில் சிறிய மாற்றம் இருக்கும் என்றே தெரிகிறது.
ரயில்வே துறையைப் பொறுத்தவரையில் நிதிஷ்குமார், லாலு பிரசாத், மமதா பானர்ஜி ஆகியோர் வசம் இருந்தது. காங்கிரஸ் கட்சிக்கு ரயில்வே அமைச்சகப் பொறுப்பு கிடைக்காமல் இருந்தது. மமதா ராஜினாமாவைத் தொடர்ந்து பன்சால் மூலம் காங்கிரஸ் வசமானது ரயில்வே அமைச்சகம். இந்த நிலையில்தான் கர்நாடக மாநில தேர்தலில் முதல்வர் பதவியை மிகவும் எதிர்பார்த்தவர் மல்லிகார்ஜூன கார்கே. தற்போது மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருக்கிறார். தலித் சமூகத்தவரான அவரை திருப்திபடுத்தும் வகையில் ரயில்வே அமைச்சர் பொறுப்பை கொடுக்க சோனியாவ் விரும்புவதாக கூறப்படுகிறது.
இதேபோல் உரம் மற்றும் சட்டத்துறைக்கும் தகுதியானவர்களை நியமிக்க வேண்டிய நிலை. இணை அமைச்சர்களிலும் மாற்றம் இருக்கலாம். இதனால் மத்திய அமைச்சரவை மாற்றம் என்பது உறுதியாகி இருக்கிறது. அனைத்து மூத்த் அமைச்சர்களும் டெல்லியில் அடுத்த வாரம் தங்கி இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.