ஓசூர் அருகே ஊருக்குள் வலம் வந்த 4 காட்டு யானைகள்: பொதுமக்கள் அச்சம்
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் காட்டு யானைகள் வலம் வந்ததால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
ஏ.எஸ்.டி.சி அட்கோ, ராம்நகர், தளி சாலை போன்ற இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. குடியிருப்பு பகுதியில் உள்ள கரும்பு, வாழை போன்றவைகளை முறித்து சாப்பிட்டு அவை அங்கேயே சுற்றித் திரிகின்றன.
இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்து யானைகளை விரட்டினர். ஆனால் அவை அஞ்சாமல் ஒன்றுடன் ஒன்று மோதி விளையாடி நகர்பகுதிகளில் உள்ள சாலைகளில் வலம் வந்தன. யானைகளை விரட்ட வனத்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
யானைகள் வனப்பகுதிக்குள் செல்லாமல், தளி சாலையில் உள்ள மத்திய பட்டு வளர்ப்பு அலுவலகம் அருகே முகாமிட்டுள்ளன. இந்த பகுதியைச் சுற்றி நகர்ப்புறமாக இருப்பதால், தற்போது யானை விரட்டும் பணியை வனத்துறையினர் நிறுத்தி வைத்துள்ளனர்.
கோலார் மாவட்ட பகுதியிலிருந்து யானைகள் வந்திருப்பதால், அவற்றிற்கு தேவையான உணவுகளை வழங்கி, இரவுக்கு மேல் அவற்றை வனப்பகுதிக்குள் விரட்ட இருப்பதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.