விஷமத்தனங்களுக்கு பலியாகி விடக்கூடாது - வீரபாண்டி மகனுக்கு கருணாநிதி அட்வைஸ்
வீரபாண்டி ராஜாவின் மகள் டாக்டர் மலர்விழிக்கும், டாக்டர்செந்திலுக்கும் சென்னையில் இன்று திருமணம் நடந்தது. கருணாநிதி திருமணத்தை நடத்தி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், நான் பல ஆண்டுகள் சேலத்தில் கலை உலக வாழ்க்கை வாழ்ந்தவன். அன்று இருந்த சேலத்திற்கும் இன்றைய சேலத்தையும் ஒப்பிட்டு பார்த்தால் இப்போது ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் எதுவாக இருந்தாலும் அதற்கு காரணம் வீரபாண்டி ஆறுமுகம்தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
சேலத்தில் உள்ள இரும் பாலை, புதிய புதிய சாலைகள் அமைக்கப்பட்டு நகரமே மாறி இருக்கிறது என்றால் ஒவ்வொரு காரியத்துக்கும் காரணம் தம்பி வீரபாண்டி ஆறுமுகம் தான். எல்லோரும் எப்போதும் அவரை சேலத்தின் சிங்கம் என்று வர்ணித்தார்கள். ஆனால் பழைய காலத்து சேலத்தையும் இன்றைய சேலத்தையும் பார்த்தால் அதற்கு யார் காரணம் என்று ஆராய்ந்தால் அதற்கு வீரபாண்டி ஆறுமுகம்தான் காரணம் என்று சொல்லலாம்.
எனவே அவரை சேலத்து சிற்பி என்பது பொருத்தமாக இருக்கும். அப்படிப்பட்ட வீரபாண்டி ஆறுமுகம் இல்ல மண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துவதில் பெருமைபடுகிறேன். அரசியல் ரீதியாக சமூக ரீதியாக, குடும்பத்தில் சில விஷமத்தனங்களை ஏற்படுத்தலாம். தம்பி ராஜா போன்றவர்கள் அதற்கெல்லாம் பலியாகி விடாமல் தந்தை எந்த அளவு பற்றும், பாசத்துடனும் பணியாற்றினாரோ அதே போல் பணியாற்றிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.