கிளிமஞ்சாரோவில் ஏறிய 'கொடிமஞ்சாரோ'க்கள்… சாதனை படைத்த அபுதாபி மாணவிகள்
அபுதாபி: கிழக்கு ஆப்ரிக்காவின் டான்சானியா நாட்டின் மிக உயரிய சிகரமான கிளிமாஞ்சாரோவில் ஏறி அபுதாபியை சேர்ந்த கல்லூரி மாணவிகள் சாதனை புரிந்துள்ளனர்.
ஆப்ரிக்க கண்டத்தின் மிக உயரிய சிகரம் என்ற பெருமைக்குரியது, 5895 மீட்டர் உயரமான டான்சானியாவில் உள்ள கிளிமஞ்சாரோ. இது உலக அளவில் நான்காவது உயரமான சிகரம் ஆகும்.
கிளிமாஞ்சாரோ சிகரத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின், அபுதாபியில் உள்ள கலீபா பெண்கள் கல்லூரியைச் சேர்ந்த 9 மாணவிகளும், 3 ஆசிரியைகளும் வெறும் ஆறு நாட்களில் ஏறி சாதனை படைத்துள்ளனர். மைனஸ் 10 முதல் 20 டிகிரி வரை குளிர் நிலவும் இந்த கிளிமஞ்சாரோ சிகரத்தில், நடுங்கும் குளிரையும் பொருட்படுத்தாமல் உச்சிக்கு சென்று அசத்தியுள்ளனர் இந்த மாணவிகள்.
பெண் கல்விக்கு நிதி திரட்டுவதற்காக இந்தக் குழுவினர் மேற்கொண்ட மலையேற்ற சாகச பயணத்தின் மூலம் இந்திய மதிப்பில் 6 லட்சம் ரூபாய் வரை நிதி திரட்டப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்சை சேர்ந்த ஒரு குழு கிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறி சாதனை படைத்திருப்பது இதுவே முதல் முறையாகும்.