அமிர்தசரஸில் உள்ள கிராமத்தில் நவாஸ் ஷரீப்பின் வெற்றியைக் கொண்டாடும் மக்கள்
அமிர்தசரஸ்: நவாஸ் ஷரீபின் கட்சி பாகிஸ்தான் தேர்தலில் வெற்றி பெற்றதை அமிர்தசரஸில் உள்ள அவரது மூதாதையர்களின் கிராமத்தினர் கொண்டாடி வருகின்றனர்.
பாகிஸ்தான் தேர்தலில் நவாஸ் ஷரீப்பின் கட்சி வெற்று பெற்றுள்ளது. இதையடுத்து அவர் 3வது முறையாக பிரதமராக உள்ளார். இந்நிலையில் அவரது வெற்றியை அமிர்தசரஸில் உள்ள அவரின் மூதாதையரின் கிராமமான ஜாட்டி உம்ரா மக்கள் கோலாகலமாக கொண்டாடினர். அந்த கிராமத்தைச் சேர்ந்த பல இளைஞர்களுக்கு கத்தாரில் வேலை கிடைக்க ஷரீப் உதவி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து அந்த கிராமத்தைச் சேர்ந்தவரும், ஷரீபின் நண்பருமான மாஸா சிங்(86) கூறுகையில்,
ஷரீபின் உறவினர்களின் தொழிற்சாலைகளில் பணியாற்றும் வாலிபர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்பட்டதில்லை. தோஹாவில் எங்கள் கிராம இளைஞர்களுக்கு அவர் வேலை வாங்கிக் கொடுத்துள்ளதற்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டுள்ளோம். பாகிஸ்தானில் எங்கள் கிரமாத்து பையன் வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.
அதே ஊரைச் சேர்ந்த பல்தேவ் சிங் என்பவர் கூறுகையில், ஷரீப் இந்தியாவுடனான உறவை மேம்படுத்துவார். அவர் மட்டும் பதவியில் இருந்திருந்தால் சரப்ஜித் சிங் பத்திரமாக வீடு திரும்பியிருப்பார் என்றார்.
ஷரீபின் வெற்றியை ஊர் மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர். மேலும் குருத்வாராவுக்கு சென்று அவருக்காக சிறப்பு பிரார்த்தனை செய்தனர். அந்த கிராமத்தில் உள்ள ஷரீப்பின் வீடு குருத்வாராவாக மாற்றப்பட்டுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்பு ஷரீப்பின் குடும்பத்தார் பாகிஸ்தான் சென்றுவிட்டனர். அவர்கள் அங்கு சென்று 2 ஆண்டுகள் கழித்து லாகூரில் ஷரீப் பிறந்தார்.
முன்னதாக 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 20ம் தேதி அப்போதைய பிரதமர் வாஜ்பாயுடன் பஞ்சாப் முதல்வர் பர்காஷ் சிங் பாதல் பாகிஸ்தான் சென்றபோது ஜாட்டி உம்ரா கிராமத்து மண்ணை ஷரீப்புக்காக எடுத்துச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.