பி.இ. பட்டம் வாங்கிய மாறுநாளே சாலை விபத்தில் பலியான வேலூர் வாலிபர்
வேலூர்: வேலூரைச் சேர்ந்த வாலிபர் பி.இ. பட்டம் வாங்கிய மறுநாளே விபத்தில் பலியாகினார்.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த கல்பநத்தம் என்னும் கிராமத்தைச் சேர்ந்த பூபதி என்பவரின் மகன் தமிழரசன்(23). சேலம் அஸ்தம்பட்டியைச் சேர்ந்த முரளிதரன் மகன் தினேஷ்(23). தமிழரசனும், தினேஷும் சேலத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்தனர். நேற்று முன்தினம் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.
இதில் கலந்து கொண்டு இருவரும் பட்டம் பெற்றனர். அந்த சந்தோஷத்தை கொண்டாட அவர்கள் நேற்று அப்பாச்சி பைக்கில் ஏற்காடு சென்றனர். ஏற்காட்டை சுற்றிப்பார்த்துவிட்டு நேற்று மதியம் 1 மணிக்கு இருவரும் பைக்கில் ஊர் திரும்பினர். ஏற்காடு மலையில் உள்ள 19வது கொண்டை ஊசி வளைவில் உள்ள சரிவில் அவர்கள் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது எதிரே வந்த என்.எஸ். என்ற தனியார் பேருந்து அவர்களின் அப்பாச்சி பைக் மீது மோதியது. இதில் பைக்கில் இருந்த இருவரும் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தமிழரசன் மற்றும் தினேஷை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தமிழரசன் உயிர் இழந்தார். தினேஷுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பிஇ பட்டம் வாங்கிய மறுநாளே தமிழரசன் விபத்தில் பலியானது அவரது கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.