சமையல் எண்ணெயையும் சிலிகானையும் ஊசி மூலம் முகத்தில் ஊற்றி… அழகுக்கு ஆசைப்பட்டு அவதிப்படும் மாடல்
சியோல்: பொதுவாக பெண்கள் தங்கள் அழகைக் கூட்டிக் கொள்ள பல்வேறு வழிமுறைகளை மேற்கொள்வது வழக்கம்தான். ஆனால், அது விபரீதத்தில் போய் விடுவதும் சில சமயங்களில் உண்டு.
தன் முகத்தை அழகாக்கிக் கொள்ளும் ஆசையில் சமையல் எண்ணெயையும் சிலிகானையும் ஊசி மூலம் முகத்தில் ஏற்றிக்கொண்ட மாடல் அழகி, ஒருவரின் முகம் வீங்கிப் போய் விகாரமாகி விட்டது.
இதனால் அப்பா, அம்மாவுக்கே அவரை அடையாளம் தெரியாத பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.இதையடுத்து முகத்தை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டுவர முடியாது என்று டாக்டர்களும் கை விரித்துவிட்டனராம்
மடோனா மாடலா நீ…
தென் கொரியாவை சேர்ந்த ஹங் மியாகு, வயது 48 மாடல். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் அழகாக இருந்ததால் மாடலிங் துறையில் இறங்கினார். சைடில், பேஷன் ஷோ, விளம்பரங்களில் பரபரப்பாக வலம் வந்துள்ளார்.
அழகி… என் பேரழகி
அழகு முகத்தை மேலும் அழகாக்கிக் கொள்ளும் ஆசை அவருக்குள் ஏற்பட்டது. முகத்தில் கொழுப்பு சத்து ஏறினால் மேலும் அழகாகும் என்று யாரோ சொன்னதை நம்பி தனது 28 வயதில் சுய அழகு சிகிச்சையில் இறங்கினார் இவர்.
கொடூர முறை…
அதற்காக அவர் தேர்ந்தெடுத்த முறை தான் கொடூரமானது. கடையில் குறைந்த விலையில் கிடைக்கும் சிலிகான் ஜெல்லையும் சமையல் எண்ணெயையும் மாறி மாறி சிரிஞ் மூலம் முகத்தில் ஏற்றிக் கொள்வாராம்.
குண்டு கன்னம்…
நாளாவட்டத்தில் குண்டான கன்னங்கள், வாளிப்பான சதையுடன் முகம் பளபளப்பாகவும் மாறியதில், வியந்து போனவர் சுய அழகு சிகிச்சையை அடிக்கடி எடுத்துக் கொள்ளலானார். சிறிது காலத்தில் ஜப்பான் சென்றவர் அங்கும் சுய அழகு சிகிச்சையை மேற்கொண்டுள்ளார்.
விபரீதமானது…
சில ஆண்டுகளுக்கு பிறகு, அவரது முகத்தில் விபரீத மாற்றங்கள் ஏற்பட தொடங்கியுள்ளன. ஆங்காங்கே சதைகள் தொங்கி, கண், வாய் அருகில் உருண்டை உருண்டையாக சதைகள் சேர்ந்துள்ளன.
சுய சிகிச்சை அடிமை…
இதனால், ஊசி சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் இருக்கவே முடியாது என்ற நிலைக்கு ஹங் மியாகு தள்ளப்பட்டார். அதற்கு அடிமையாகவே மாறிய மியாகு, 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த விபரீத சுய சிகிச்சையை மேற்கொண்டதன் விளைவு.. அவரது முகம் முழுவதுமாக உருக்குலைந்து விகாரமாக மாறியது.
அடையாளம் மாறியது…
பெற்ற அப்பா, அம்மாவால்கூட அடையாளம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு பயங்கரமாக அவரது முகம் மாறிவிட்டது. வாய்ப்புகள் அனைத்து பறிபோய், அனைவரும் கேலியும் கிண்டலும் செய்தனர். உணவுக்கூட வழியில்லாததால் பழைய பேப்பர், இரும்பு கடையில் வேலைக்கு சேர்ந்தார். ஆதரவற்றோர்களுக்கு அரசு அளிக்கும் கருணை தொகை, பழைய கடையில் கொடுக்கும் சம்பளத்தில் வாழ்க்கையை ஓட்டினார்.
நிதியுதவிகள்…
இதற்கிடையில், அவரது கடந்த கால பயங்கரம் பற்றிய தகவல்கள் டிவிக்களில் ஒளிபரப்பாயின. அதில் பேட்டியளித்த ஹங் மியாகு, தனது சிகிச்சைக்கு உதவும்படி கதறினார். நாடு முழுவதும் இருந்தும் நிதியுதவிகள் குவிந்தன.
பாவம்…
ஆஸ்பத்திரிக்கு சென்று தன் நிலைமை பற்றி எடுத்து கூற, அவரது முகம் மற்றும் கழுத்து பகுதியில் டாக்டர்கள் 10 முறை ஆபரேஷன் செய்து சிலிகான் மற்றும் தேவையற்ற கொழுப்பு, கட்டிகளை அகற்றினர். ஆனாலும், விகார தோற்றம் இன்னும் மாறவில்லை. அவரது முகத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர வாய்ப்பே இல்லை என்று டாக்டர்கள் கூறியுள்ளனராம்.