2014ல் மனிதர்களை விட செல்போன்கள்தான் ஜாஸ்தியா இருக்குமாம் - ஆய்வு
லண்டன்: 2014ம் ஆண்டின் இறுதியில், உலகில் மனிதர்களை விட செல்போன்களின் எண்ணிக்கை அதிகமாகி விடும் என ஆய்வு ஒன்று கூறியுள்ளது.
சர்வதேச தொலைத்தொடர்பு நிறுவனங்களின் யூனியன் இந்த கணிப்பை வெளியிட்டுள்ளது.
2014 இறுதிக்குள் செல்போன் இணைப்புகளின் எண்ணிக்கை 700 கோடியாக உயர்ந்திருக்குமாம்.
680 கோடி செல்போன்கள்
தற்போது உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 680 கோடி மொபைல் இணைப்புகள் உள்ளனவாம். மக்கள் தொகை 700 கோடியாக உள்ளது.
மூன்றில் ஒரு பங்கு ஆன்லைனில்
உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்குக்கும் மேலானோர் ஆன்லைன் இணைப்புகளில் மூழ்கிப் போயுள்ளனராம்.
சோவியத் நாடுகளில்தான் அதிகம்
முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளில்தான் அதிக அளவிலான மொபைல் போன்கள் புழக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. அங்கு ஒரு நபருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட செல்போன் இணைப்புகள் உள்ளனவாம்.
ஆப்பிரிக்காவில்தான் குறைவு
ஆப்பிரிக்காவில்தான் இருப்பதிலேயே மிகவும் குறைவான மொபைல் இணைப்புகள் உள்ளன. அதாவது அங்கு 100 பேருக்கு 63 இணைப்புகள்தான் உள்ளனவாம்.
ஐரோப்பாதான் ஆன்லைனில் முன்னணி
உலக அளவில் ஆன்லைன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறதாம். அதில் ஐரோப்பாதான் முன்னணியில் உள்ளதாம். அதாவது உலக ஆன்லைன் மக்கள் தொகையில் 75 சதவீதம் அங்குதானாம்.
2வது இடம் அமெரிக்காவுக்கு
அமெரிக்கா 61 சதவீத அளவிலும், 3வது இடத்தில் ஆசியா 32 சதவீதத்துடனும் காணப்படுகிறது.
ஆப்பிரிக்காதான் கடைசி
ஆப்பிரிக்காவில் ஆன்லைன் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 16 சதவீதமாகும்.