அட்சய திரிதியை.. 1000 கிலோ தங்கம் அமோக விற்பனை
சென்னை: அட்சய திரிதியை தினத்தன்று நேற்று சென்னையில் 1000 கிலோ தங்கம் விற்பனையாகியுள்ளதாக வியப்புத் தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று அட்சய திரிதியை தினமாகும். இந்த நாளில் சிறிய அளவிலாவது தங்கம் வாங்க வேண்டும் என்ற ஐதீகத்தை மக்கள் கடந்த சில வருடங்களாக தீவிரமாக கடைப்பிடித்து வருகிறார்கள். இதனால் நகைக் கடைகளில் இந்த தினத்தன்று மக்கள் கூட்டம் காணப்படும்.
நகைக் கடைகளும் பல்வேறு சலுகைகளை அறிவித்து விற்பனை செய்வார்கள். நேற்றும் அட்சயதிரிதியையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நகைக் கடைகளில் கூட்டம் அலைமோதியது.
செல்வம் பெருகும்
அட்சய திரியை தினத்தன்று நகை வாங்கினால் வீட்டில் செல்வம், ஐஸ்வரியம் பெருகும் என்பது மக்கள் நம்பிக்கையாகும்.
வீழ்ந்து போன தங்கம்
இந்த ஆண்டு தங்கம் விலை நன்றாகவே வீழ்ச்சி அடைந்திருந்தது. எனவே நகை வாங்க கூட்டம் அமோகமாக இருந்தது.
கடந்த ஆண்டை விட அதிகம்
நகை விலை குறைவு காரணமாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகம் பேர் நகை வாங்கினராம்.
பவுன் விலை ரூ. 20,320
நேற்று சென்னையில் நகை பவுனுக்கு ரூ.20,320 என்று விற்றது.
தி.நகரில் திருவிழா...
சென்னை தி.நகரில்தான் நிறைய நகைக் கடைகள் உள்ளன. எனவே அங்குள்ள கடைகளில் பெரும் கூட்டம் காணப்பட்டது.
1000 கிலோ வித்துருச்சே
சென்னையில் உள்ள நகைக் கடைகளில் மட்டும் நேற்று 1000 கிலோ அளவுக்கு நகைகள் விற்பனையானதாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.
நாடு முழுவதும் 25 டன்
அதேசமயம், நாடு முழுவதும் 25 டன் தங்கம் விற்பனையானதாக இன்னொரு தகவல் தெரிவிக்கிறது.