கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிர்ப்பு: 3மாவட்ட மீனவர்கள் வேலைநிறுத்தம்
நெல்லை: கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் இன்று ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அணுமின் நிலையம் செயல்பட அனுமதி வழங்கி அண்மையில் தீர்ப்பளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மூன்று மாவட்ட மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மீன்பிடித் தடைக்காலம் என்பதால், விசைப்படகு மீனவர்கள் வழக்கம் போல் கடலுக்குச் செல்லமாட்டார்கள். போராட்டத்திற்கு ஆதரவாக நாட்டுப்படகு மீனவர்களும் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கூடங்குளம், செட்டிகுளம் பகுதிகளில் இன்று கடைஅடைப்பு போராட்டமும் நடைபெறுகிறது.
அணுமின் நிலைய செயல்பாட்டிற்கு தடை விதிக்கக்கோரி, நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் மீனவர்கள் சார்பில் காலை 11 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
போராட்டத்தையும் மீறி அணுமின் நிலையத்தை இயக்க அரசு முன்வந்தால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.