தூத்துக்குடி அனல் மின் நிலைய 3வது யூனிட்டில் கோளாறு.. மின் உற்பத்தி பாதிப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் மூன்றாவது யூனிட்டில் மீண்டும் ஏற்பட்டுள்ள திடீர் பழுதால் மின்உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி துறைமுக சாலையில் தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான அனல்மின்நிலையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு 210மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட 5அலகுகள் அமைக்கப்பட்டு நாள்தோறும் 1050மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
கடந்த சில மாதங்களாக தூத்துக்குடி அனல்மின் நிலைய மின்உற்பத்தி அலகுகள் அடிக்கடி பழுதாகுவதும், மின்உற்பத்தி பாதிக்கப்படுவதும் வாடிக்கையாவிட்டது. கடந்த 8ம் தேதி தான் முதலாவது யூனிட்டின் பாய்லரில் பழுது ஏற்பட்டது.
இந்த பழுது சரி செய்யப்பட்டு மின் உற்பத்தி சீராக நடந்து வந்த நிலையில், கடந்த 10ம் தேதி இரவு மூன்றாவது மின் உற்பத்தி அலகின் பாய்லரில் திடீர் பழுது ஏற்பட்டது. இதனால் அந்த யூனிட்டில் 210மெகாவாட் மின்உற்பத்தி செய்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி இந்த யூனிட்டிற்கு நிலக்கரி கொண்டுவரும் அலகிலும் பழுது ஏற்பட்டது. இந்த பழுதுகள் நேற்றுதான் சரிசெய்யப்பட்டு மின் உற்பத்தி துவங்கி நடந்து வந்தது.
இந்நிலையில் இன்று(14ம் தேதி) மதியம் 3மணிக்கு 3வது யூனிட்டின் பாய்லருக்கு தண்ணீர் கொண்டு வரும் குழாயில் திடீர் பழுது ஏற்பட்டது. இதனால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 3வது யூனிட்டில் ஏற்பட்டுள்ள பழுதுகளை சரிசெய்யும் பணியில் அனல்மின் நிலைய பணியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மின்வெட்டின் நேரம் அதிகரித்து வருகிறது. காற்றாலைகளின் மின் உற்பத்தியால் தென்மாவட்டங்களை தவிர பிறபகுதிகளில் மின்வெட்டு குறைந்துள்ளது. இத்தகைய சூழலில் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் அடிக்கடி ஏற்பட்டுவரும் பழுதானது மின்வெட்டை அதிகரிக்கும் ஆபத்தை தொடர்ந்து ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் கடந்தாண்டு தண்ணீர் பற்றாக்குறையால் நிலக்கரி கொண்டு செல்லும் கன்வேயர் பெல்டுகளில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு வந்தது. ஆனால் இந்த ஆண்டு அதற்கு மாறாக பாய்லர்களில் அடிக்கடி பழுது ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
இதற்கிடையே நேற்று நிருபர்களிடம் பேசிய கலெக்டர் ஆஷிஷ்குமார் 25ஆண்டுகளை கடந்த தூத்துக்குடி அனல்மின் நிலைய மின் உற்பத்தி சாதனங்களை வரும் ஜனவரி மாதத்தில் புதுபிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிக்கை அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்றார்.