மாத்திரை சரியில்லை என்று சண்டை ...நைஸாக காப்பகத்திலிருந்து தப்பிய 40 மனநல நோயாளிகள்!
நைரோபி: மாத்திரைகளில் வீரியம் இல்லை என்ற தகராறை சாதகமாகப் பயன்படுத்தி கென்யாவில் 40 மனநோயாளிகள் காப்பகத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளனர்.
கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில் உள்ள மத்தாரி மனநல காப்பகத்தில், சிகிச்சைக்காக தங்கியுள்ள உள்நோயாளிகளுக்கு தரக்குறைவான உணவு மற்றும் வீரியம் குறைந்த மாத்திரைகள் வழங்கப்படுவதாக கூறப்பட்ட புகாரால், நோயாளிகளுக்கும் காப்பக உரிமையாளர்களுக்கும் இடையில் பெரும் தகராறு ஏற்பட்டது.
தகறாரின் உச்சகட்டமாக ஊழியர்களிடம் இருந்த அறை சாவியை பறித்துக்கொண்ட சுமார் 70 நோயாளிகள் காப்பகத்தில் இருந்து தப்பியோடினர்.
அவர்களில் 30 பேரை வாயிற் கதவருகே வைத்து காவலர்கள் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து தப்பிய சுமார் 40 நோயாளிகள் குறித்து மனநல காப்பக நிர்வாகம் போலீசில் புகார் அளித்தது.
தற்போது அவர்களில் 10 பேர் பிடிபட்டுள்ளதாகவும், மீதமுள்ளவர்களை தேடும் பணி தொடர்வதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது மக்களுக்கு அவர்களால், இடையூறு ஏற்படுவதை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.