கொதிக்கும் அக்னி வெப்பம்… காய்கறி விலை கூட சுடுதே!
நெல்லை: அக்னி நட்சத்திர வெயில் கொளுத்தி வரும் அதே நேரத்தில் காய்கறிகளின் விலையும் வெப்பத்தை விட சூடாக உள்ளதாக நுகர்வோர்கள் கலக்கமடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் காய்கறி சந்தைகளில் வரத்து குறைவினால் கடந்த சில வாரங்களாக விலை கடுமையாக உயர்ந்துவருகிறது.
மலை பிரதேசங்களில் பயிரிடப்படும் காய்கறிகளான கேரட், பீட்ரூட், பீன்ஸ், உருளை,காலிபிளவர போன்றவை மட்டுமின்றி கிராமப்புறங்களில் பயிரிடப்படும் சாதாரண காய்கறி விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
மல்லி இலைக்கே கஷ்டமா இருக்கு
தண்ணீர் தட்டுபாடு காரணமாக மல்லி இலையை கூட விளைவிக்க முடியாமல் விவசாயிகள் கஷ்டப்படுகின்றனர். இதனால் ஒருகிலோ மல்லி இலை ரூ.150க்கு விற்கப்பட்டது.
ஓசூரிலிருந்து கொண்டு வர்றாங்கப்பா
தற்போது ஓசூர் பகுதியில் விளைவிக்கப்படும் மல்லி இலையே தமிழகத்தின் பல பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. இதை வாங்க வியாபாரிகள் கடும் போட்டியில் ஈடுபடுவதால் இதன் விலையும் உயர்ந்துள்ளது.
வாகன வாடகை வேற ஜாஸ்தி
தொலை தூரத்தில் இருந்து வருவதாலும், வாகன வாடகை உள்ளிட்டவற்றால் இவற்றின் விலையும் உயர்ந்துள்ளது.
அட அவரைக்காய் விலையைப் பாருங்க
அவரைகாய், முருங்கைகாய், கேரட் ஒருகிலோ ரூ.6, எலுமிச்சை ரூ.80, பச்சை மிளகாய், சேம்பு ரூ.48, தக்காளி ரூ.50, கருணை, சாதா பீன்ஸ் சவ்சவ், பாகற்காய் ரூ.40க்கு விற்கப்படுகிறது.
மக்கள் திணறல்
முக்கிய காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்து வருவதால் நடுந்தர மற்றும் ஏழை மக்கள் இவற்றை வாங்க முடியாமல் திணறி வருகின்றனர்.
கம்மி விலை காயே பெஸ்ட்
பூசணிக்காய், சீனிஅவரைக்காய், வாழைக்காய், வாழைத்தண்டு போன்ற விலை குறைந்த காய்கறிகளையே மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
மழை பெஞ்சாத்தான் சாமீ...
கோடை வெப்பம் தணிந்து மழை பெய்தால் மட்டுமே காய்கறிகளின் விளைச்சல் அதிகரித்து விலை குறைய வாய்ப்புள்ளது என்கின்றனர் வியாபாரிகள்.