சிக்கிமில் இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை
டெல்லி: இந்தியா-சீனா இடையே நல்லெண்ண நடவடிக்கைகளை வலுப்படுத்துவது தொடர்பான இருதரப்பு ராணுவ அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று சிக்கிமில் நடைபெற உள்ளது.
இந்திய கடற்பரப்பில் அதிகரித்து வரும் சீன கடற்படைகளின் வேவு நடவடிக்கை, இந்திய எல்லைக்குள்ளான ஊடுருவல் போன்றவற்றால் இருதரப்பு உறவில் விரிசல் ஏற்பட்டது. லடாக் பகுதியில் சீனா மேற்கொண்டிருந்த ஊடுருவல் நடவடிக்கை திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து தற்காலிகமாக இருநாடுகளிடையே பதற்றம் குறைந்திருக்கிறது. இந்த நிலையில் சிக்கிம் மாநிலத்தின் நாது லா எல்லைப் பகுதியில் இந்திய -சீனா ராணுவ அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்த இருக்கின்றனர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ந் தேதி சீன அதிகாரிகள் இந்தியாவுக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து இன்று அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் பிரிகேடியர் நிலையிலான ராணுவ அதிகாரிகள் கலந்து கொள்வர். இருநாடுகளுக்கு இடையேயான எல்லை விவகாரங்கள் குறித்து இன்று விவாதிக்கப்பட இருக்கிறது.