சொத்து குவிப்பு வழக்கு: திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி, மனைவி கோர்ட்டில் ஆஜர்
விழுப்புரம்: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி, தனது மனைவியுடன் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
விழுப்புரம் திமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 27.9.2011 அன்று வழக்குப் பதிவு செய்தனர்.
பின்பு கடந்த 14.7.2012 அன்று இந்த வழக்கு தொடர்பாக விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இதனையடுத்து இந்த வழக்கு சம்பந்தமாக பொன்முடியும், அவரது மனைவி விசாலாட்சியும் கடந்த 3.9.2012 அன்றும், 10.9.2012 அன்றும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அப்போது இருவருக்கும் குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி திருநீலபிரசாத் விசாரணையை ஜூன் மாதம் 17ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.