அணுமின்நிலையத்தில் தரம் குறைந்த கருவிகள் விஞ்ஞானிகள் எச்சரிக்கை… மின்உற்பத்தி தள்ளி வைப்பு
கூடங்குளம்: கூடங்குளம் அணுமின்நிலையத்தில் தரம்குறைந்த கருவிகள் பயன்படுத்தப்படுவதை தடுக்க வலியுறுத்தி பிரதமர் மன்மோகன், தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோருக்கு 60 விஞ்ஞானிகள் கையெழுத்திட்டு கடிதம் அனுப்பியுள்ளனர். அதேசமயம் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அணு உலையில் மின் உற்பத்தி தொடங்குவது தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக இணையதள தகவல் கூறியுள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அணுமின் நிலையம் செயல்படலாம் என கடந்த 6 ஆம் தேதி உத்தரவிட்டது.
பாதுகாப்பு ஏற்பாடு மற்றும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பான 17 நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. அந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்ட உடன், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்கப்படும் என கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநர் சுந்தர் தெரிவித்துள்ளார்.
நிறைவடைந்த பணிகள்
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அணு உலைப் பணிகள் 99 புள்ளி 66 விழுக்காடு நிறைவடைந்து விட்டதாக இந்திய அணுசக்தி கழக இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஞ்சிய பணிகள் இந்த மாதத்திற்குள் நிறைவடையும் எனவும் கூறப்பட்டுள்ளது. அவ்வாறு பணிகள் நிறைவடைந்தால், அடுத்த மாதத்தில் உற்பத்தி தொடங்கப்பட வாய்ப்பு உள்ளது. எனினும் உற்பத்தியில் தாமதம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து இந்திய அணுசக்தி கழக இணையதளத்தில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
தரமற்ற கருவிகள் எச்சரிக்கை
இந்த நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தரமற்ற கருவிகள் பயன்படுத்தப்படுவதை உடனடியாக தடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் தமிழக,கேரளா மாநில முதல்வர்களுக்கும் சுமார் 60 விஞ்ஞானிகள் கையெழுத்திட்டு கடிதம் அனுப்பியுள்ளனர்.
அணுமின்நிலையத்தின் கிரிட்டிகல் சேப்டி சிஸ்டம் பிரிவில் பயன்படுத்தப்படும் 4 வால்வுகள் தரம் குறைந்தவை என்று ஊடகங்களில் தகவல் வெளியாகி இருந்தது. இதனிடையே, தரம் குறைந்த அந்த கருவிகள் பயன்படுத்தப்படுவதை தடுக்க கோரி உயர் கல்வி நிலையங்களைச் சேர்ந்த 60 விஞ்ஞானிகள், பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கடிதம் எழுதி உள்ளனர். அந்த கடிதங்களில், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள குறிப்பிட்ட அந்த கருவிகள் தரம் வாய்ந்தவைதானா என்பதை உறுதி செய்த பின்னரே அங்கு மின் உற்பத்தியை தொடங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அணுமின் நிலையம் செயல்படத் தொடங்கிவிட்டால், கதிர் வீச்சு காரணமாக அந்த கருவிகளின் தரம் பற்றி பரிசோதிக்க முடியாமல் போய்விடும் என்றும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுபோல் கடிதங்களை, தமிழ்நாடு, கேரளா மாநில முதல்வர்களுக்கும், மத்திய அணுசக்தி துறைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் மும்பை ஐ.ஐ.டி., இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ்- பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களைச் சேர்ந்த 60 விஞ்ஞானிகள் அந்த கடிதங்களில் கையெழுத்திட்டு உள்ளனர்.