கருணாநிதியின் திருவள்ளுவர் சிலைக்குப் போட்டியாக ஜெயலலிதாவின் தமிழ்த் தாய் சிலை?
சென்னை: திமுக ஆட்சிக்காலத்தில் கன்னியாகுமரியில் 133 அடி உயரத்தில் பிரமாண்டமாக கட்டி எழுப்ப்ப்பட்டு அனைவரையும் கவர்ந்த திருவள்ளுவர் சிலையை விட பிரமாண்டமானதாக ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் மதுரையில் ரூ. 100 கோடியை வாரியிறைத்து தமிழ்த்தாய் சிலை அமைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் திருவள்ளுவர் சிலைக்குப் போட்டியாகவே தமிழ்த் தாய் சிலை அறிவிப்பை முதல்வர் வெளியிட்டுள்ளதாகவும் மக்கள் மத்தியில் பேச்சு அடிபடுகிறது.
அதேசமயம், இந்த பிரமாண்டத் தமிழ்த் தாய் சிலை, உலக தமிழர்கள் மத்தியில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு புதிய இமேஜைக் கொடுக்கும் என்று அதிமுகவினர் திடமாக நம்புகின்றனர்.
குமரிக் கடலில் வான் புகழ் வள்ளுவர்
குமரிக் கடலில் வள்ளுவருக்கு சிலை அமைக்க வேண்டும் என்ற கருத்துரு 1979ம் ஆண்டில் ஏற்பட்டது. அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய் இதற்கான அடிக்கல்லையும் நாட்டினார்.
90ல் தொடங்கிய கட்டுமானம்
இருப்பினும் அரசியல் மாற்றங்கள், அரசு மாற்றங்கள் உள்ளிட்ட காரணங்களால் 1990ல்தான் கட்டுமானப் பணிகள் தொடங்கின.
விவேகானந்தருக்கு அருகே
குமரிக் கடலில் விவேகானந்தர் பாறைக்கு அருகே உள்ள பாறையில்தான் வள்ளுவர் சிலை பிரமாண்டமானதாக அமைந்திருக்கிறது.
38 உயர பீடம்
சிலையைத் தாங்கி நிற்கும் பீடமானது 38 அடி உயரம் கொண்டது. அதற்கு மேலே 133 அடி உயரத்திற்கு திருவள்ளுவர் சிலை நிற்கிறது.
உலகின் முதல் கருங்கல் சிலை
இந்த சிலை முற்றிலும் கருங்கற்களால் ஆனதாகும். உலகில் இப்படிப்பட்ட முழுமையாக கற்களால் செய்யப்பட்ட சிலை எங்குமே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
வள்ளுவரை மிஞ்சுவாரா தமிழ்த் தாய்
பல்வேறு வழிகளிலும் பேசப்படும் திருவள்ளுவர் சிலையை மிஞ்சும் வகையிலேயே மிகப் பெரிய பொருட் செலவில் தமிழ்த் தாய் சிலை அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளார் என்று தெரிகிறது.
150 அடி உயரத்திற்கு வருமா
அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை போல என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அந்த சிலையானது கிட்டத்தட்ட 150 அடி உயரம் கொண்டதாகும். எனவே அந்த அளவுக்கு அல்லது அதை விட உயரம் கொண்டதாக தமிழ்த் தாய் சிலை அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எந்த இடத்தில்
தமிழ்த் தாய் சிலை மதுரைக்கு வெளியே பிரமாண்டமான ஒரு இடத்தில் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நகருக்குள் சிலை அமைக்கும் அளவுக்கு இடம் இருக்கிறதா என்று தெரியவில்லை. எனவே இந்த சிலை எங்கு அமைக்கப்படும் என்ற பெரும் எதிர்பார்ப்பு மதுரை மக்களிடையே எழுந்துள்ளது.
அமைப்பது யாராக இருந்தாலும் புகழ் தமிழுக்கே
வள்ளுவர் சிலை கருணாநிதியின் பெயரைச் சொன்னால், தமிழ்த் தாய் சிலை ஜெயலலிதாவின் புகழ் பாடும். எப்படியோ இறுதிப் புகழ் தமிழுக்கே....