பாலச்சந்திரனை சுட்டது மெய்க்காப்பாளர்களாகக் கூட இருக்கலாமே: இலங்கை
கொழும்பு: சேனல்-4 டெலிவிஷன் காட்சிகளின் நம்பகத்தன்மைபற்றி விசாரணை நடத்தப் போவதாக இலங்கை அறிவித்துள்ளது.
ஆவணப்படங்கள் மூலம், இலங்கையில் உள்நாட்டுப்போர் உச்சக்கட்டம் அடைந்தபோது சிங்கள ராணுவம் நடத்திய மனித உரிமை மீறல் சம்பவங்களை இங்கிலாந்து நாட்டின் சேனல்-4 டெலிவிஷன் அம்பலப்படுத்தியது.
அதில் ஒரு காட்சியில், விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் 12 வயது பாலச்சந்திரன், சிங்கள ராணுவத்தினரால் அவர்களது பதுங்கு குழியில் கைக்கு எட்டும் தொலைவில் சுட்டுக்கொல்லப்பட்ட வீடியோவும் அடக்கம்.
அந்த வீடியோ காட்சியை சேனல்-4 டெலிவிஷன் வெளியிட்டபோது, அதைக் கண்ட அத்தனை பேரின் நெஞ்சங்களும் பதறித் துடித்தன. ஆனால் பாலச்சந்திரனை சிங்கள ராணுவம் சுட்டுக்கொல்ல வில்லை என இலங்கை அரசு மறுத்து வருகிறது.
சுதந்திரமான விசாரணை வேண்டும்:
போரினால் கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணையம், சேனல்-4 டெலிவிஷன் வெளியிட்ட மனித உரிமை மீறல் வீடியோ காட்சிகளின் நம்பகத்தன்மை பற்றி சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்று பரிந்துரைத்தது.
உலக சமுதாயத்தின் கண்டனம்:
உள்நாட்டுப் போரின்போது மனித உரிமை மீறல்களை அரங்கேற்றி, உலக சமுதாயத்தின் கண்டனத்துக்கு ஆளாகிய இலங்கை அரசே, இப்போது அதன்மீது விசாரணை நடத்தி வருகிறது. இந்த தகவல் ஐரோப்பிய யூனியனுக்கு, இலங்கை தூதர் அம்ஜா மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலச்சந்திரனை சிங்கள ராணுவம் சுட்டுக்கொல்லவில்லை என்று இலங்கை தூதர் அம்ஜா கூறியுள்ளார்.
வலுவான ஆதாரம் உள்ளது:
இது பற்றி அம்ஜா கூறும்போது, 'இலங்கை அரசு மீது அவநம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் என்ற கெட்ட நோக்கத்தில் இங்கிலாந்து டெலிவிஷன், விடுதலைப்புலிகளின் ஆதரவு அமைப்புகளுடன் சேர்ந்து இப்படி செயல்பட்டிருக்கிறது என்பதற்கு என்னால் வலுவான ஆதாரம் காட்ட முடியும்'
வல்லுநர் கருத்து:
பாலச்சந்திரன் கொலைக் காட்சியை சேனல்-4 வெளியிட்டபோது, அவர் கைக்கு எட்டும் தூரத்தில் வைத்துத்தான் கொல்லப்பட்டார் என்பதற்கான வல்லுனர் கருத்தையும் சேர்த்து வெளியிட்டது. பாலச்சந்திரன் சிங்கள ராணுவத்திடம் பிடிபடுவதை தடுக்க தனது மெய்க்காவலர்களைக் கொண்டே சுட்டுக்கொல்லப்பட்டிருக்க வாய்ப்பு உண்டு என்ற சந்தேகத்தை ஏன் வல்லுனர் குறிப்பிடவில்லை என்று அம்ஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆதாரம் வேண்டும்:
பாலச்சந்திரன் படுகொலைக்கான அசல் ஆதாரங்களை வழங்குமாறு சேனல்-4 டெலிவிஷனுக்கு இலங்கை அரசு வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.