பாகிஸ்தானில் கடத்தப்பட்ட சரப்ஜித்சிங்கின் வழக்கறிஞர் மகனுடன் திடீர் விடுதலை
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் சிறையில் படுகொலை செய்யப்பட்ட இந்தியரான சரப்ஜித்சிங்கின் வழக்கறிஞர் அவைஸ் சேக் தமது மகனுடன் இன்று காலை இந்திய எல்லை அருகே மர்ம மனிதர்களால் கடத்தப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் குண்டுவெடிப்பு வழக்கில் தூக்கு தண்டனை கைதியாக இருந்தவர் சரப்ஜித்சிங். அவரது தூக்கு தண்டனை நிறைவேற்றம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அவர் அண்மையில் சக கைதிகளால் கொடூரமான தாக்குதலுக்குள்ளானார். இதில் மூளைச் சாவடைந்த சரப்ஜித்சிங் பின்னர் கடந்த 2-ந் தேதி உயிரிழந்தார். அவரது உடல் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டு முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில் சரப்ஜித்சிங்கின் வழக்கறிஞர் அவைஸ் சேக் தமது மகன் ஷாருக்குடன் இந்திய எல்லையோரத்தில் இருக்கும் கிராமமான புர்கி ஹூதாரியாவுக்கு பண்ணை வீட்டுக்கான நிலம் வாங்குவதற்காக சென்றிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த போலீஸ் சீருடை அணிந்த நபர்கள் இருவரையும் டிரக் வாகனத்தில் ஏற்றி அடையாளம் தெரியாத மறைவிடத்துக்கு கொண்டு சென்றிருக்கின்றனர். இது தொடர்பாக அவைஸ் சேக்கின் மற்றொரு மகன் போலீசில் புகார் கொடுக்க இருவரையும் அந்நாட்டு போலீசார் தேடி வந்தனர். பின்னர் லாகூர்- ஷேக்புரா சாலையில் இருவரையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
சரப்ஜித்சிங்கின் வழக்கறிஞரையும் மகனையும் கடத்தியவர்கள் யார் என்பது இதுவரை தெரியவில்லை.
சரப்ஜித்சிங்குக்காக ஆஜரான தமக்கு அண்மைக்காலமாக கொலை மிரட்டல் வருவதாக அவைஸ் சேக் கூறியிருந்ததைத் தொடர்ந்து அவர் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டிருக்கிறார்.