சென்னையில் குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் போராட்டம்: அல்லாடும் மக்கள்
தனியார் குடிநீர் கேன் தயாரிப்பு நிலையங்களில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் தரமில்லா குடிநீர் கேன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு சீல் வைத்துள்ளனர். மேலும் பல நிறுவனங்கள் குடிநீர் கேன் விற்பனை செய்ய தடை விதித்துள்ளனர்.
இது தவிர சில நிலையங்களில் அதிகாரிகள் மின் இணைப்பை துண்டித்துவிட்டனர். மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் குடிநீர் கேன் தயாரிப்பவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டத்தில் குடிநீர் கேன் வினியோகிப்பவர்கள், குடிநீர் அடைக்கும் நிறுவனங்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். ஏற்கனவே பல குடிநீர் கேன் தயாரிப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் இந்த வேலைநிறுத்தத்தால் குடிநீர் கேன்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட மக்கள் குடிநீர் கேன் எங்காவது கிடைக்குமா என்று கடை கடையாக ஏறி இறங்கி வருகின்றனர்.