130 வயது ஆமை தோட்டத்தில் 'வாக்கிங்' போனபோது எலி கடித்து இறந்த பரிதாபம்
லண்டன்: சாதனைக்குரிய 130 வயதுடைய அபூர்வ ஆமையை எலி ஒன்று கடித்து உயிரை பறித்த சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
இங்கிலாந்து நாட்டில் குர்ன்சாய் பகுதியில் வசிக்கும் லீ கேலீஸ், 130 வயதுள்ள ஆமை ஒன்றை வளர்த்து வந்தார். இது உலகிலேயே அதிக வயதுடைய ஆமை என்ற சிறப்பு பெற்றது. கடந்த 1892ம் ஆண்டில் பிறந்த தாமஸ் என்ற பழமையான ஆமை தான் அது. இரண்டு உலகப் போர்களை இந்த ஆமை பார்த்துள்ளது.
கடந்த நில நாட்களுக்கு முன்னர் கார்டன் பகுதியில் நடமாடிக் கொண்டிருந்த மூதாட்டி ஆமையை அங்கு வந்த எலி ஒன்று காலில் கடித்து விட்டது. இதில் புண் ஏற்பட்டு அவதிப்பட்டது தாமஸ் ஆமை.
இது குறித்து லீ கேலீஸ் கூறுகையில், எங்கள் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக ஆமை இருந்து வந்தது. கடந்த 1992ம் ஆண்டு எனது தந்தைக்கு பிறந்த நாள் பரிசாக இந்த ஆமை கிடைத்தது.
தோட்டத்தில் நடமாடிக் கொண்டிருந்த ஆமையை, அங்கு வந்த ஒரு எலி கடித்ததில் காலில் புண் ஏற்பட்டது. 5 நாட்களாக அதற்கு சிகிச்சை அளித்தோம். ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை' என்று தெரிவித்துள்ளார்.
காயம் அடைந்த ஆமைக்கு விஷமுறிவு மருந்து வழங்கி சிகிச்சை அளித்தார்கள். ஆனாலும் கிருமி தொற்று தீவிரமானதால் 5 நாட்களுக்கு பிறகு ஆமை பரிதாபமாக இறந்து போனது.