மார்ஸில் வாழ ஒரு ஐடியா கொடுத்து பாஸ்டன் செல்லும் சென்னை மாணவர்
எதிர்காலத்தில் மனிதன் பூமியில் வாழ முடியாத சூழல் ஏற்பட்டால் செவ்வாய் கிரகத்தில் வாழ்வதற்கான வழிமுறைகளைக் கூறி, ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனம் மாநில அளவில் நடத்திய 'யங் சயன்டிஸ்ட் ஆஃப் தமிழ்நாடு' போட்டியில் முதலிடம் பெற்றுள்ளார், சென்னை அருகே உள்ள பம்மல் ஸ்ரீ சங்கர வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர் ஆர். ரச்சன்.
செவ்வாய் கிரகமும் நமது பூமியைப் போன்றது தான் என்றாலும் அங்கு போதிய சூரிய வெளிச்சம் இருக்காது. இதனால் அங்கு தாவரங்களோ, விலங்கினங்களோ இருக்காது. ஸ்பேஸ் ஸ்டேஷன் போன்று மிகப்பெரிய கண்ணாடி வீடு ஒன்றை, தயார் செய்து அங்கு அமைக்க வேண்டும். அந்த வீட்டிற்குள் மனிதன் வாழ்வதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். அந்தக் கண்ணாடி வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது மட்டும் விண்வெளி உடைகளை அணிந்து கொள்ள வேண்டும்.
மனிதனுக்குத் தேவையான ஆக்சிஜனை ‘குளோரெல்லா பைரினாய்டு போசா' என்ற பாசி மூலம் உருவாக்கிக் கொள்ளலாம். இந்தப் பாசி, மனிதன் வெளியிடும் கார்பன் டை ஆக்ஸைடை உடனே ஆக்ஸிஜனாக மாற்றிக் கொடுக்கும் வல்லமை படைத்தது. இதனை அங்கு வளர்த்தால் பிராணவாயு பிரச்சனையை சரி செய்து கொள்வது மட்டுமின்றி, அப்பாசியை நாம் உணவாகவும் உட்கொள்ளலாம். ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் தாவரங்களை அங்கு உற்பத்தி செய்யலாம். சூரிய வெளிச்சம் அங்கே கிடைக்காது என்பதால் அதற்கு மாற்று ஏற்பாடு ஒன்றை செய்ய வேண்டும்.
மின்மினிப்பூச்சியின் உடலில் வெளிச்சம் ஏற்படுவதற்கு அதன் உடம்பில் உள்ள மரபணு தான் காரணம். அதனை பயோ டெக்னாலஜி மூலம் மரங்களின் மரபணுவுடன் ஒன்றாக்கி உருவாக்கி விட்டால் மரங்கள் ஒளிர ஆரம்பித்துவிடும். இதன்மூலம் வெளிச்சம் கிடைத்துவிடும். இது குறித்த ஆராய்ச்சிகளை அமெரிக்க விஞ்ஞானிகள் செய்து கொண்டிருக்கிறார்கள். இதே முறையைப் பின்பற்றி மின்சாரத்தையும் உருவாக்க முடியும்.
எலெக்ட்ரிக் ஈல் என்ற மீனின் உடலில் மின்சாரம் உருவாவதற்கான காரணம் அதனுடைய மரபணு தான். அதே மரபணுவை மரங்களிலோ, விலங்குகளின் உடல்களிலோ மரபணு மாற்றம் மூலம் உட்செலுத்திவிட்டால், அதன் மூலம் மின்சாரத்தை தயார் செய்து கொள்ளலாம். எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய டை எத்தில் ஈதரை சில ரசாயன மாற்றங்கள் செய்தால் போதும். அதிலிருந்து நமக்கு எரிபொருள் கிடைத்துவிடும். அங்கே நமக்கு சில பொருட்கள் தேவை என்றால், அதை நானோ டெக்னாலஜி மூலம் அங்கேயே உருவாக்கிக்கொள்ள முடியும். இதைத்தான் எனது புராஜெக்டில் செய்து காட்டியிருந்தேன் என்கிற ரச்சனின் எதிர்கால இலக்கு, பயோ டெக்னாலஜி துறையில் மிகப்பெரிய விஞ்ஞானியாக வர வேண்டும் என்பது தான். அறிவியலில் மட்டுமல்ல, ஓவியத்திலும் சிறந்து விளங்குகிறார் அவர்.
அம்மாணவனின் ஆய்வுகளுக்கு வழிகாட்டியவர், அறிவியல் ஆசிரியை கவிதா. தமிழ்நாட்டில் 60 பள்ளிகளிலிருந்து 372 மாணவர்கள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர். அத்தனை பேரையும் தனது அறிவுத் திறமையால் பின்னுக்குத் தள்ளிவிட்டு முதல் இடம் பிடித்துவிட்டார் ரச்சன் என்கிறார், ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பின் இயக்குநர் ஸ்ரீமதி.
ரச்சன் மிகவும் புத்திசாலி. நல்ல படிப்பாளி. இப்போட்டியில் மாநில அளவில் முதலாவதாக வந்ததால் அமெரிக்கா செல்வதற்கு அவருக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. அவருடன் செல்வதற்கு, பள்ளி முதல்வரான எனக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நான்கு நாட்கள் அங்கு இருக்கப் போகிறோம்.
பாஸ்டன் நகரில் உள்ள பங்கர் ஹில் கம்யூனிட்டி காலேஜ், மசாசுசெட்ஸில் உள்ள எம்.ஐ.டி. என நான்கு நாட்களும் பல்வேறு அறிவியல் குறித்த கருத்தரங்குகள், அமெரிக்க வரலாறு, கலாசாரம் குறித்த நிகழ்வுகளில் கலந்து கொள்ள இருக்கிறார் ரச்சன்" என்கிறார், பள்ளியின் முதல்வர் மாலதி பாலகிருஷ்ணன்.