கடலூரில் சீமான் கூட்டம்: தமிழக அரசு திடீர் தடை!... நள்ளிரவில் நோட்டீஸ் ஒட்டிய போலீஸ்
நடிகரும், இயக்குனருமான சீமானின் நாம் தமிழர் கட்சியின் 4ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையைக் கண்டித்து கடலூரில் இன்று பொதுக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கூட்டம் நடத்த அனுமதி கோரி கடந்த 16ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம் கூட்டம் நடத்த அனுமதி அளித்தது.
பொதுக் கூட்டத்தையொட்டி கடலூர் முழுவதும் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக நடத்தப்படும் பொதுக்கூட்டத்துக்கு தடை விதிக்க கோரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராதிகா, மாவட்ட கலெக்டர் கிர்லோஷ் குமாருக்கு பரிந்துரை செய்தார். இதனை ஏற்றுக் கொண்ட கலெக்டர், கூட்டத்துக்கு தடை விதித்தார்.
இது தொடர்பான நோட்டீஸை நாம் தமிழர் கட்சியின் மாவட்ட பொறுப்பாளரிடம் அதிகாலை 2.30 மணிக்கு காவல்துறையினர் அளிக்க சென்றனர். ஆனால் அதனை வாங்க அவர் மறுத்துவிட்டார். இதையடுத்து, அவரது வீட்டின் கதவில் நோட்டீஸை காவல்துறையினர் ஓட்டினர்.
இதைத் தொடர்ந்து கடலூரில் வைக்கப்பட்டிருந்த விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் பேனர்களையும் இரவோடு இரவாக போலீசார் அகற்றினர்.
கூட்டம், கருத்தரங்கம்
இதனிடையே கூட்டம் நடத்த நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுள்ளதால் கண்டிப்பாக கூட்டம் நடைபெறும் என்று நாம் தமிழர் கட்சியின் கடலூர் மாவட்ட அமைப்பாளர் கடல் தீபன் கூறியுள்ளார். அதேபோல் நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று கருத்தரங்கமும் நடைபெறுகிறது. இதில் சீமான் உள்பட முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். இதனால் கடலூரில் பதற்றமான நிலை காணப்படுகிறது.