லண்டனில் முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி பேரணி: தா. பாண்டியன் பங்கேற்பு
லண்டன்: பிரித்தானிய தமிழர் பேரவையினால் லண்டனில் ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி பேரணி மற்றும் பொதுக் கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கலந்து கொண்டனர்.
ஹைட் பூங்காவில் துவங்கிய ஊர்வலம் மாலை 4 மணிக்கு வாட்டர்லூவை சென்றடைந்தது. மாலை 3 மணிக்கு வாட்டர்லூவில் பொதுக் கூட்டம் ஆரம்பமாக இருந்த போதும் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் பேரணியில் கலந்து கொண்டதால் பேரணி சுமார் 1 மணி நேரம் தாமதமாகவே வாட்டர்லூவை அடைந்தது. பேரணியில் கலந்து கொண்ட மக்கள் இலங்கையில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வது என்ற இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனின் முடிவு மற்றும் தமிழ் மக்களுக்கு எதிரான இலங்கை அரசின் இனப்படுகொலையை தடுப்பதற்கு தவறிய ஐ.நா. ஆகியவற்றை கண்டிக்கும் நூற்றுக்கணக்கான பதாகைகள் மற்றும் சுலோக அட்டைகள் ஆகியவற்றை ஏந்தியும், கோஷங்களை எழுப்பியும் சென்றனர்.
பேரணி நகர்ந்து சென்ற இடம் லண்டன் நகரின் மையப் பகுதியாக இருந்ததால் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும், பிரித்தானிய மக்களும் இந்த பேரணியை வேடிக்கை பார்த்தனர். தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலையினை வேற்றின மக்களுக்கு எடுத்துக்காட்டும் நிகழ்ச்சிகளும் கவனத்தை ஈர்த்தன. இதில் இந்தியாவில் இருந்து இந்திய கம்யூனிச கட்சியின் தலைவர் தா.பாண்டியன், உலக தமிழர் பேரவையின் தலைவர் இம்மானுவல் அடிகளார் மற்றும் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரையாற்றியதுடன், உலகத் தமிழர் இயக்க தலைவர் பழ நெடுமாறன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் பலரது உரைகள் திரையில் ஒலிபரப்பு செய்யப்பட்டது.
பேரணி மற்றும் பொதுக்கூட்ட புகைப்படங்கள்