கணவரின் படுக்கை அறையில், மனைவியின் நிர்வாண ஓவியங்கள்: விசாரிக்க கோர்ட் உத்தரவு
மும்பை: பிரிந்து வாழும் மனைவியின் நிர்வாண ஓவியங்களை படுக்கை அறையில் மாட்டி வைத்து ரசித்த ஓவியர் மீதான வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளலாம் என மும்பை ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
மும்பையை சேர்ந்த ஓவியர் சிந்தான் உபாத்யாய். இவருக்கு 1998-ம் ஆண்டு திருமணம் நடந்தது. கணவன், மனைவி இருவருக்கும் சொந்தமாக சாந்தாகுரூஸ் பகுதியில், அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒன்று உள்ளது.
விவாகரத்து வழக்கு குடும்பநல நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள நிலையில், இருவரும் ஒரே வீட்டில் தனித்தனி அறைகளில் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் ஒருநாள் வேலைக்காரர்கள் மூலமாக தனது நிர்வாண ஓவியங்கள் கணவரது அறையில் இருப்பது மனைவிக்கு தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனே தனது கணவர் மீது பாந்திரா கோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்தார்.
அந்த வழக்கின் சாராம்சமாக அவர், "நானும் எனது கணவரும் பிரிந்து வாழ்கிறோம். ஒரே வீட்டில் தனித்தனி அறையில் இருக்கிறோம். விவாகரத்து கேட்டு வழக்கு தொடுத்துள்ளோம். இந்த நிலையில் என் கணவர் தனது படுக்கை அறையில் என்னை நிர்வாண ஓவியங்களாக வரைந்துள்ளார். இது பெண்களை கேவலமாக சித்தரிப்பதை தடை செய்யும் சட்டத்தின் கீழ் குற்றமாகும். எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறி உள்ளார்.
வழக்கை ஏற்ற பாந்திரா கோர்ட்டு, இதுகுறித்து பதில் அளிக்க நேரில் ஆஜராகுமாறு ஓவியர் சிந்தானுக்கு சம்மன் அனுப்பியது. இதற்கு பதிலடி தரும் விதமாக, ஓவியர் சிந்தான், மும்பை ஐகோர்ட்டில் அப்பீல் வழக்கு தாக்கல் செய்தார்.
அந்த வழக்கில் அவர், "எனது மீதான புகார், இந்திய தண்டனைச்சட்டத்தின் கீழோ, பெண்களை கேவலமாக சித்தரிப்பதை தடை செய்யும் சட்டத்தின் கீழோ தண்டிக்கத்தக்க குற்றம் ஆகாது. எனவே எனக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது சட்டவிரோதம்" என கூறி இருந்தார்.
சிந்தானின் அப்பீல் வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.சி. தர்மாதிகாரி முடிவில் ஓவியரின் அப்பீல் வழக்கை தள்ளுபடி செய்துள்ளார். சிந்தானின் மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தால் விசாரிக்க உகந்தது என தீர்ப்பு அளித்துள்ளார்.
'வழக்குதாரரின் அறை, வேலைக்காரர்கள், டிரைவர்கள் போன்றவர்கள் பார்க்கிறவகையில் திறந்து இருக்கிறபோது, அந்த நிர்வாண ஓவியங்களை அவர்களும், மனைவியும் பார்க்க முடியும். எனவே அந்த புகாரை ரத்து செய்ய முடியாது.எனவே அரசியல் சட்டம் பிரிவு 19 (1) (ஏ) வழங்கியுள்ள அடிப்படை சுதந்திரம் மீறப்படுவதாக கூறி, சம்மன் அனுப்பும் நடவடிக்கைகளில் இந்த கோர்ட்டு தலையிட முடியாது ‘, என இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது